| இனியவன்'s profile┼█┼.۩۞۩.எண்ணச் சிதறல்கள்...BlogLists | Help |
┼█┼.۩۞۩.எண்ணச் சிதறல்கள்.۩۞۩.┼█┼The Pursuit of Happyness |
|||||
|
March 21 தாஜ்மகால்திருச்சிராப்பள்ளி நினைவுகள்மீசை
எழுதியவர் : திரு அப்துல் கையூம் (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)
சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.
மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் கொண்டு திரிவதென்றால் எரிச்சலாக இருக்காதா பின்னே?
“ஆம்பளைன்னா அவனுக்கு மீசை இருக்கோணும்” இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக அறிவுறுத்தும் ஆசாமிகளைக் கண்டால் எனக்கு பற்றிக் கொண்டு வரும். இப்படி ஒரு பார்முலாவை ஒரு பேச்சுக்கு உண்டாக்கி வைத்துச் சென்ற அந்தக் கால பெருசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ மீசை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தைபோல் தோன்றவில்லை. வடமொழியாக இருக்கலாமோ?
மீசைக்கு நம்மவர்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து விட்டார்களோ என்று சில சமயம் எண்ணத் தோன்றும். ஆங்கிலேயர்களோ, மற்ற நாட்டினரோ மீசை இருந்தால்தான் ஆண்பிள்ளை என்று சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லையே?
முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் எதிரொலி என்று அர்த்தமாம். என்ன அநியாயம் இது? சீனர்களுடைய மீசை பூமியை பார்த்த வண்ணம் புடலங்காய் போல தொளதொளவென்று தொங்கிய வண்ணம் காட்சி தரும். அவர்கள் இனத்தில் வீரர்கள் இல்லவே இல்லையா? பூனைக்குகூட மீசை இருக்கிறதே? அது என்ன பெரிய வீரனா? மீசையே இல்லாத ஜான்ஸிராணியை வீரத்தின் உதாரணமாக நாம் சொல்வதில்லையா?
பிளாஷ் பேக் - எனக்கு என் வீட்டில் பெண் பார்க்க அலைந்தார்கள். இந்தி நடிகன் போல் ஸ்டைலாக காட்சி தரவேண்டும் என்ற காரணத்துக்காக நான் மீசையை மழித்துக் கொண்டிருந்தேன். “ஏம்பா நீ மீசை வச்சா என்னா?” என் தகப்பனாருடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. “இது என்ன இது பொறிச்ச வாடா மாதிரி” என் பாட்டியின் தோழி அய்ஷானுடைய குசும்பு. இந்த நக்கல் ஓவர்தானே?
“பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் உன் போட்டோவை அனுப்பி வை” என்று என் தகப்பனார் கடிதம் எழுதியபோது மீசை இல்லாத போட்டோவைத்தான் அனுப்பி வைத்தேன். பார்த்து முகம் சுளித்திருப்பாரோ என்னவோ?
கல்யாணத்திற்குப் பின் ஒருநாள் என் மனைவி சொன்னாள். “உங்க போட்டோவை முதன் முதலில் பார்த்தபோது 16-வயதினிலே படத்தில் வர்ற டாக்டர் மாதிரியே ஸ்டைலா இருந்துச்சா, எனக்கு மிகவும் புடிச்சுப் போச்சு.” அட்றா சக்கை. எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. காலம் முழுக்க மீசையே இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழிக்க சால்ஜாப்பும் லைசன்சும் கிடைத்த ஏகபோக ஆனந்தம் எனக்கு.
மீசை வைப்பவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மீசை இல்லாதவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மீசையை ஒதுக்குகிறேன், ட்ரிம் செய்கிறேன் என்று கூறி பாத்ரூமில் பாதி நேரத்தை செலவழித்து விடுவார்கள். பொன்னான நேரத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் இந்த மீசை இல்லாதவர்கள் என்று நான் மார்தட்டிச் சொல்ல முடியும்.
போன்சாய் என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் மீசையை பற்றி இப்படி எழுதியிருந்தேன்.
இன்றோடு போகட்டும் இந்த நச்சரிப்பு மீசை
உதட்டோரம் எனக்கு வீண் சுமை
வெறுமனே ஒரு முகப்புத் தோரணம்
முணுமுணுக்கும் கம்பளiப் பூச்சி
உண்மையைச் சொன்னால் மோக யுத்தத்தில் முத்தத்தின் எதிரி
இதைப் படித்துப் பார்த்த என் சித்தப்பா டாக்டர் அப்துல் ரசாக்கிற்கு என்ன ஆத்திரமோ தெரியவில்லை.
மீசை மோக யுத்தத்தில் முத்தத்தின் எதிரி
என்று எழுதியிருந்தாய். மீசை செய்யும் குறும்பை நீ அறியமாட்டாய் என்று விமர்சனம் செய்து எழுதி இருந்தார்.
அவர் கறுகறுவென்று தடிமனான மீசை வைத்திருப்பார். அவருடைய அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார். நாம் ஏன் அநாவசியமாக விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன்.
சினிமாவில் காமெடி செய்வதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் அல்லது யுக்தி இந்த மீசை என்பது நான் வைக்கும் வாதம். சந்திரபாபு, ஏ.கருணாநிதி, தங்கவேலு, நாகேஷ் இவர்களுடைய மீசையைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.
பழைய கறுப்பு வெள்ளை படங்களiல் ஹாஸ்ய நடிகர் “துடிக்கிறது என் மீசை” என்று வீர வசனம் பேசுவார். ஒட்டு மீசை துள்ளி கீழே விழும். தியேட்டரில் சிரிப்பு அலைமோதும். சமீபத்தில் வெளிவந்த 23-ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவின் நடிப்பை விட அவருடைய கொடுவா மீசையின் நடிப்புக்கே பெரும் வரவேற்பு கிடைத்தது. (போதாதக்குறைக்கு கிச்சுகிச்சு மூட்ட மீசைக்கு மேலே இரண்டு பூக்கள் வேறு. கொடுமையடா சாமி)
மீசை என்ன பொல்லாத மீசை? அதே போன்சாய் தொகுப்பிலே இன்னொரு கவிதை இப்படி எழுதியிருந்தேன்.
மீசை முளைத்தோரெல்லாம் பாரதி என்றால்
எனக்கும் ஆசை கவிதை வடித்திட
இப்படிக்கு பாசமுடன் கரப்பான் பூச்சி - என்று
ஒரு சமயம் சலூனில் அமர்ந்து படுஜாலியாக மீசையை மழித்துக் கொண்டிருந்தபோது வானொலியில் அந்த பழைய பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
மணமகள் தேவை - நல்ல மணமகள் தேவை
ஆணழகன் ஒருவனுக்கு அரும்பு மீசைக் காரனுக்கு
தேவை தேவை தேவை மணமகள் தேவை
எனக்கு எரிச்சலாக வந்தது. அரும்பு மீசை இருந்தால் அவன் ஆணழகனா? இந்த பாடலை எழுதிய கவிஞனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கத்தோன்றியது. பென்சிலால் வரைந்ததுபோல் சிலர் மெல்லிய மீசை வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரும்பு மீசையாம். இது மோவாயில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதற்குப் பெயர் மீசையா? பேனாவும் பேப்பரும் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா? இப்படியெல்லாம் மனதுக்குள் கொதித்துப் போவேன்.
ஹிட்லர் மீசை, மா.பொ.சி மீசை, வீரப்பன் மீசை. என்று சிலருடைய மீசை மிகவும் பிரபலமாகி விட்டது. மா.பொ.சி. இவ்வளவு பெரிய மீசையை வைத்துக் கொண்டு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் மனுஷர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.
மீசை முருகேஷ் என்ற அருமையான இசைக் கலைஞர். எல்லா விதமான பக்க வாத்தியங்களும் இவருக்கு அத்துப்படி. வாயினாலேயே எல்லா விதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் கொடுப்பார். அவருடைய அபரிதமான இசைஞானத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டுதல்களைவிட அவருடைய மீசைக்கு கிடைத்த பாராட்டுதல்களே அதிகம். மீசை இன்று இருக்கலாம் நாளை காணாமல் போகலாம். இதுக்குப்போய் இத்தனை ஆரவாரமா? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.
“மீசைக் கவிஞன் பாரதி” என்று கவிஞர்கள் பாராட்டும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். அவனுக்கு மீசை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? அவன் எழுதிவைத்திருப்பதை பாராட்டுவதை விட்டுவிட்டு அனாவசியமாக மீசையை பெரிதுப் படுத்தி புகழ்கிறார்களே என்று ஆத்திரம் வரும்.
நானும் சில உண்மைகளை வெளiப்படையாகச் சொல்லத்தான் வேண்டும். என்னதான் மீசை மீது ஒரு வெறுப்பிருந்தாலும் அவ்வப்போது மீசை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்ததென்னவோ உண்மைதான். அந்த ஆசை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.
வெளிநாட்டில் வசிக்கும் நான் ஒருமுறை தாயகம் புறப்பட ஆயத்தமாகும் தறுவாயில் மீசையோடு ஊருக்குப் போனால் சற்று வித்தியாசமாக இருக்குமே என்று மீசை வளர்த்தேன். இதற்காக மெனக்கெட்டு எந்தவிதமான முயற்சியோ கஷ்டப்படவோ இல்லை. ஒண்ணுமே செய்யாமல் சிவனேன்னு இருந்தேன். அதுவாக வளர்ந்து விட்டது. ஓரளவு வளர்ந்த பிறகு மீசையை அழகு படுத்தலாமே என்று முனைந்து ஒதுக்க ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் ஒரு பக்கம் பெரிதாகவும் மற்றொரு பக்கம் சிறிதாகவும் போய்விட்டது. மேலும் என் திறமையை காண்பிக்கப்போக, குரங்கு அப்பத்தை பிய்த்த கதையாக அது ஹிட்லர் மீசையாட்டம் அலங்கோலமாக போய்விட்டது. அன்று மீசை மீது எனக்கு வந்த கோபம் சொல்லிமாளாது. மீசை என்று யாராவது பேச்செடுத்தால் அவர்களை கடித்துக் குதறவேண்டும் போலிருந்தது.
அப்போதுதான் என் தாயாருடைய போன் வந்தது. “நீ ஊர்வரும்போது அவசியம் மீசைக்காரத் தைலம் கொண்டு வா மறந்து விடாதே” என்று உரக்கச் சொன்னார். “அதெல்லாம் முடியாது நான் கோடாலித் தைலம் வாங்கி வருகிறேன்” என்று அதைவிட உரக்கமாக கத்தினேன்.. “நீ எப்பவும் இப்படித்தான் நான் ஒண்ணு சொன்னால் நீ ஒண்ணு செய்வே” என்று சலித்துக் கொண்டு போனை வைத்தார். என்னுடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?
“மீசை நரைத்தாலும் இவனுக்கு ஆசை நரைக்கவில்லை பாருங்கள்” என்று நடுத்தரவயதினரைப் பார்த்து யாராவது கிண்டலடித்தால் நான் கடுப்பாகி போவேன். மீசை நரைத்தால் என்ன? ஆசை இருக்கக் கூடாதா? விடலைப் பருவத்தின்போது வருவது வெறும் காதல் மயக்கம். ஆத்மார்த்த காதல் பிறப்பதோ நடுத்தர வயதில்தான் என்பது என்னுடைய பயங்கரமான கண்டுபிடிப்பு. ஜொள்ளர்கள் இந்த வயதில்தான் அதிகம்.
“At Forty Men become naughty; Women become fatty”
என்று ஆங்கிலேயன் சும்மாவா சொல்லி வைத்துப் போனான்? எத்தனை அனுபவம் பொதிந்த வாக்கியம் இது?
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவி கரிசனமாக அருகில் வந்து “எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நம்மை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளiடம் போய் நான் என் மீசையைப் பத்திதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால் “இவனுக்கு கழன்றுவிட்டதோ?” என்பதுபோல் ஒரு மாதிரியாக பார்ப்பாள். எதற்கு இந்த தொந்தரவென்று இரண்டு கைகளாலும் எழுதுவதை மறைத்துக் கொண்டேன். கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
எந்த வித முணுமுணுப்பும் இல்லாது இத்தனை வருஷம் மீசை இல்லாமல் ஜாலியாக ஓட்டி விட்டேன். திடீரென்று இந்த விபரீத ஆசை மீண்டும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சென்ற மாதம் மறுபடியும் மீசை வளர்க்க ஆரம்பித்தேன். பாதி வெள்ளை முடி, பாதி கறுப்பு முடி. கண்ணாடியில் பார்த்தபோது வயதானவன்போல் ஒரு தோற்றம். ஒரு விருந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு இடும் மையை லேசாக ஆட்காட்டி விரலால் தடவி மீசை மீது பூசிக் கொண்டால் ஒண்ணும் தெரியாது என்று என் மனைவி சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்ல அதுபோலவே செய்தேன். இழந்த இளமை ஒருவழியாக மீண்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. விருந்துக்கு போன பிறகு கைகழுவச் சென்ற நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் ஈரமான என் கைகளை முகத்தில் பூசிக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கப் போக, அப்பொழுதுதான் புரிந்தது. என் மேக்கப் கலைந்து முகமெல்லாம் கரியை பூசிக் கொண்டதுபோல் ஆகிவிட்டது. வெட்கித்துப்போய், பூனைபோல் மெதுவாக அங்கிருந்து நழுவி வந்தேன்.
அதற்குப் பிறகு நண்பன் ஒருவனின் உபதேசத்தின்படி ‘டை’ செய்தால் என்ன என்று தோன்றியது. அது கறுப்பு மருதாணி என்று சொன்னார்கள். முதன் முறை என்பதால் எப்படி பூசுவது என்று தெரியவில்லை. பசைபோல கரைத்து என் மனைவியிடம் கொடுத்து பூசச் சொன்னேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஒரு பட்டையான பிரஷ்ஷை எடுத்து சுவற்றுக்கு சுண்ணாம்பு பூசுவதைப் போல் விளாசித் தள்ளி விட்டாள். அரைமணி நேரம் நகரக் கூடாது என்று கண்டிஷன் வேறு. முடி கன்னங்கரேல் என்று ஆகிவிட்டது.
அடுத்த நாள்தான் அந்தக் கொடுமை. அந்த மருதாணியில் என்ன கெமிக்கல் சேர்ந்திருந்ததோ தெரியவில்லை. என் முகம் முழுதும் புஸ்ஸென்று வீங்கி அரிப்பும் எரிச்சலும் தொடங்கி விட்டது. மீசையை அப்படியே பிய்த்து எறிந்து விடலாம் என்று தோன்றியது. மோவாயெல்லாம் புண்ணாகி விட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டேன். அலர்ஜி ஆகிவிட்டதாம்.
புண் ஆறியதும் முதல் வேலையாக மீசையை மழித்து வீசி எறிந்தப் பின்தான் எனக்கு திருப்தி. இப்பொழுதெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விபரீத ஆசையும் வருவதில்லை. இளமையாகவே இருப்பதுபோல் ஓர் உணர்வு, உற்சாகம். முகத்தை லேசாக வருடிக் கொண்டேன். வழுவழுவென்று அட்டகாசமாக இருந்தது. Punctuality
எழுதியவர் : திரு அப்துல் கையூம் உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான்.
“எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற கலையில் இன்னும் சரியாக தேர்ச்சி பெறாததே இதற்கு காரணம். சரியென்று மனதில் பட்டதை உளறிக் கொட்டி நண்பர்களiடத்தில் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு,
பள்ளிப் பருவத்தில் காலந்தவறாமையின் அவசியத்தை எனக்கு எடுத்துரைக்காத ஆசிரியர்களே இல்லை எனலாம். காலந்தவறாமையை ஒருவன் தவறாது கடைப்பிடித்தால் அவன் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை எட்டி விட முடியம். இது அவர்கள் ஆற்றிய அறிவுரைகள்.
பின்னர்தான் எனக்குப் புரிந்தது காலந்தவறாமையை கடைப்பிடித்தால் மட்டும்போதாது, அறிவு இருந்தால் மட்டும் போதாது, எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் அவசியம் வேண்டும் என்று.
“டோஸ்ட் மாஸ்டர்ஸ்” என்ற இயக்கத்தில் என்னைச் சேர சொன்னார்கள். ஆரம்பத்தில் இது ஏதோ நட்சத்திர ஓட்டல் சமையற்காரர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் சங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அப்புறமாகத்தான் தெரிந்தது அது பேச்சுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு இயக்கம் என்று.
PUNCTUALITY இது அவர்களுடைய தாரக மந்திரம். அதற்குத் தலைவராக இருக்கும் என் நண்பர் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” கூட்டத்திற்கு சரியான நேரத்தில் சென்று சரியான நேரத்தில் கூட்டத்தை தொடங்கி விடுவார்.
காலந்தவறாமையின் அவசியத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் உணர்ச்சி ததும்ப எடுத்தியம்புவார். அதை விடுத்து மற்ற நேரங்களில் இத்தனை மணிக்கு வருகிறேன் என்று வாக்களித்து விட்டு மனுஷன் சரியான நேரத்துக்கு வந்ததாக சரித்திரமே இல்லை.
இவர்கள் ஒரு பேச்சுக்காகவும் பகட்டுக்காகவும் வெளீயுலகத்திற்கு காட்டுவதற்காக மட்டுமே சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றும்.
அவசியம் நேர்ந்தாலொழிய மற்ற நேரங்களில் காலந்தவறாமையை கடைப்படிப்பதற்காக அவ்வளவுதூரம் மண்டையை போட்டு நாம் அதிகம் உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நான் முடிவெடுத்து ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன.
“ஏன்யா.. ஒருத்தன் வேலை தேடி ஒரு அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு போறான்னு வச்சுக்க, அவன் கரெக்டான நேரத்துக்கு போவலேன்னா செலக்ட்டே ஆக முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் போது நீ வாசகர்களுக்கு அட்வைஸ் பண்ற லட்சணமாய்யா இது?” என்று நீங்கள் முனகுவது என் காதில் விழத்தான் செய்கிறது.
“இதோ.. பாருங்க மிஸ்டர்.. நீங்க எல்லோரும் இனிமே ஆபிஸுக்கு லேட்டாத்தான் போவணும். போயி நல்லா வாங்கிக் கட்டிக்கணும்” அப்படின்னு நான் சொல்ல வரலே. என்னோட அனுபவத்திலே நானும் எவ்வளவோ காலந்தவறாமையை கடைப்பிடிச்சு பார்த்துட்டேன். ஊஹும்.. பிரயோஜனமே இல்லை. உங்களுக்கு அது வொர்க் அவுட் ஆனுச்சுன்னா தாரளாமா கடைப்பிடியுங்க. நானா வேணாமுன்னு சொல்றேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திலே நாம் ஆஜராகுறது என்பது பிரச்சினையே இல்லை. சில சமயம் அதை பாராட்டுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் வயிற்றெரிச்சல்.
நான் வசிக்கிற பஹ்ரைன் நாட்டிலே இந்தியச் சங்கங்கள் கலாச்சார விழாக்கள் நடத்தும். நேரத்தோடு சென்று பார்வையாளர்களுக்காக நாற்காலிகளை எடுத்து வரிசையாக போட்டதுதான் மிச்சம்.
நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 7 மணி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் பேனர் மாட்டிக் கொண்டிருப்பார்கள். மைக்செட்காரர் பொறுமையாக ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருப்பார்.
பங்க்ச்சுவாலிட்டி என்பது வேறொன்றும் இல்லை. முன்கூட்டியே ஒரு இடத்திற்குச் சென்று யார் யார் எவ்வளவு லேட்டாக வருகிறார்கள் என்று வேவு பார்க்க உதவும் ஒரு யுக்தி என்பது எனது கொலம்பஸ் கண்டுபிடிப்பு.
ஒரு கூட்டத்திற்கு ஒருத்தர் லேட்டாக வந்தால் அவர் வி.ஐ.பி. என்று அர்த்தம். ஆளுக்காளு எழுந்து நின்று கும்பிடு போடுவார்கள். இன்னும் படுலேட்டாக வந்தால் அவர் வி.வி.ஐ.பி. என்று அடையாளம் கண்டுக் கொள்ளலாம். அவருக்கு வரவேற்பு இன்னும் படுஉற்சாகமாக இருக்கும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "The Early bird gets the worm, but the Early worm gets eaten"
முன்கூட்டியே செல்லும் நற்பண்பு கொண்ட அந்த புழுவுக்கு கிடைத்த சன்மானம் அது அந்த பறவைக்கு இரையாகப் போனதுதான். பார்த்தீர்களா? நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்களே?
நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு படத்திலே "நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்" என்று சொல்லும் போது தியேட்டரே துர்ள் கிளப்பும். அதற்கு என்ன அர்த்தம்? அவர் லேட்டாக வருவதை ரசிகர்கள் அங்கீகரிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்?
நான் பள்ளியில் படிக்கும் போது அபுபக்கர் எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வருவான். வாத்தியார் அவனை சரியான “லேட் லத்தீப்”பாக இருக்கிறாயே என்று சொல்வார். இதற்கு முன் எந்த லத்தீப் இப்படி லேட்டாக வந்து உவமை காட்டக்கூடிய அளவுக்கு உயர்fந்த மனிதர் ஆனார் என்று தெரியவில்லை. அந்த லேட் லத்தீபை கண்டு மனதார பாராட்ட வேண்டும். “இன்று எல்லோரும் உதாரணம் காட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறீரே.. நீர் பலே கில்லாடி ஐயா” என்று.
என் பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நாகையில் சர் அஹ்மது மரைக்காயர் என்ற பிரமுகர். “சர்” என்ற கௌரவ பட்டம் ஆங்கிலேயன் தந்து விட்டுப் போனதாம். இந்த பிரமுகர் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் அவருக்கு வேண்டி ரயிலும் காத்திருக்குமாம். அவர் பொழுதோடு சென்று ரயிலேறி இருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக கருதி என் பாட்டி சொல்லியிருக்க மாட்டார்.
எந்த அரசியல்வாதியாவது சரியான நேரத்துக்கு பொதுக் கூட்டத்திற்கு வந்ததாக நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா? எவ்வளவுக்கெவ்வளவு ஜனங்களுடைய பொறுமையை சோதித்து தாமதமாக வருகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பெரிய பிரமுகர் என்று அர்த்தம்.
எத்தனையோ அரசியல்வாதிகள் சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதித்து வந்ததால்தான் அவர்கள் வெடிகுண்டிலிருந்தும், கண்ணி வெடியிலிருந்தும் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
நான் நெருங்கிய உறவினர்களுடைய வீட்டுக்கு விருந்துண்ண போனால் வழக்கப்படி தாமதமாக “லேட் லத்தீபாகவே” செல்வது வழக்கம். “என்ன இவ்வளவு லேட்டாக வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டால் கைவசம் ரெடியாக வைத்திருக்கும் இலத்தின் பழமொழியை எடுத்து விடுவேன். அது "Better Late than Never" என்பது.
லேட்டாக போவது பெரிய விஷயமே அல்ல. அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் திறமையே அடங்கி இருக்கிறது. சமாளிஃபிகேஷன் என்பது ஒரு தனிக்கலை. (ஆயகலைகள் 64-ல் இதனை நம் முன்னோர்கள் சேர்த்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை)
லேட்டாக அடிக்கடி போயி பழகிக் கொண்டால்தான் அந்த கலையை நாம் திறம்பட வளர்த்துக் கொள்ள முடியும். சமயோசித புத்தி என்பது இதில் வரப்பிரசாதம். பங்க்சுவாலிட்டியை கீப்-அப் செய்கிறேன் என்று கூறும் பேர்வழிகளுக்கு இந்த கலைத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாது.
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுகிறான் பார்” என்று யாராவது நம்மை புகழ்ந்தால் ‘ஓரளவு இந்த கலையில் தேர்ச்சி பெற்று வருகின்றோம்’ என்று பொருள்.
மலேசியாவில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் மிகவும் தாமதமாக செல்கிறார், பார்வையாளர்களிடமிருந்து விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுடைய ரத்த அழுத்தம் எகிறிவிட்டிருந்தது. மின்னல் வேகத்தில் மேடையில் வந்த கண்ணதாசன் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.
“சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். ஆனால் எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்றார். அவ்வளவுதான் சோர்ந்து போயிருந்த கூட்டத்தினர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து விட்டனர்.
இதோ போன்று இன்னொரு முறை அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணிக்கு பேசுவதாக இருந்தது. சித்திரை மாதம் வேறு. புழுக்கம் தாங்க முடியவில்லை. இரவு பத்து மணியாகியும் அண்ணா வரவில்லை. கூட்டம் பொறுமையை இழந்து கூச்சலும் குழப்பமும் அதிகமாகி விட்டது. “பெரியோர்களே… தாய்மார்களே தயவுசெய்து அமைதி காக்கவும். இன்னும் சற்று நேரத்தில் தலைவர் அவர்கள் வந்து விடுவார்” என்று ஒரு கரைவேட்டிக்காரர் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பத்தரை மணிக்கு அண்ணா
மேடை ஏறினார். மாதமோ சித்திரை நேரமோ பத்தரை உங்களுக்கோ நித்திரை
என்று சமயோசிதமாய் அடுக்குமொழியில் பேச ஆரம்பித்து விட்டார். கூட்டத்தினருக்கு அசதியும் சோர்வும் பறந்து போயே விட்டது. தாமதமாக வரும் அளவுக்கு ஒருவர் உயர்ந்து விட்டால் அவர் எப்படிப்பட்ட நிலைமையையும் திறமையாக சமாளித்து விடுவார் என்று அர்த்தம்.
சரியான நேரத்தில் வந்து சரியான நேரத்தில் சில அரசு பேருந்துகள் கிளம்பி விடும். காலநேரத்தை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்கு warning கிடைத்து விடும். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாகவே இருக்கும். அந்த போக்குவரத்து நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும்.
அதே பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் போக்குவரத்து லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும். சரியான நேரத்துக்கு வந்து விடும். ஆனால் சரியான நேரத்துக்கு கிளம்பாது. டுர்.. டுர்.. என்று உறுமிக் கொண்டு கிளம்புவதைப்போல் பாவ்லா காட்டும். ஆனால் கிளம்பாது. ஒரு வழியாக பயணிகளுடைய வசைமொழிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு எல்லா காலி இருக்கைகளையும் நிரப்பியே பிறகே நடத்துனர் விசிலை ஊதுவார். அதே பஸ்ஸில் கடுப்பாகி உட்கார்ந்திருக்கும் நான் வண்டி புறப்பட்டவுடன் ‘ஹு...ம் பிழைக்கத் தெரிந்தவர்கள்’ என்று மனதார அவர்களை பாராட்டிக் கொள்வேன்.
என் மனைவியின் தாய் வழி தாத்தா மிகவும் கண்டிப்பான பேர்வழி. சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்துக்கு துர்ங்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். நேரம் தவறவே மாட்டார். கல்யாணமான புதிரில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். பகல் 12.00 மணிக்கு மதிய உணவை பரிமாறிவிட்டு “மாப்பிள்ளே .. நல்லா சாப்பிடுங்க” என்றார், காலைச் சாப்பாடே நமக்கு 11.00 மணிக்குத்தான். உள்ளே தள்ளிய இட்லியும் தோசையும் இன்னும் செரிமானமே ஆகவில்லை. இந்த லட்சணத்தில் தட்டை நிறைய சோற்றை குவித்து வைத்து “ஒரு வெட்டு வெட்டுங்க மாப்பிள்ளே..” என்று சொன்னால் எதை வெட்டுவது?
அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரவு 8.00 மணிக்கெல்லாம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு “படுத்து நல்லா துர்ங்குங்க மாப்பிள்ளே..” என்று வேறு 144 சட்டம் போடுவார்’ “கிழிஞ்சது கிருஷ்ணகிரி போ..” என்று மனதுக்குள் முனகிக் கொள்வேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து இரவு 1.00 மணிக்கு முன்னர் துர்ங்கியதாக ஞாபகமே இல்லை.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாத்தாவைக் கண்டால் எல்லோருக்கும் குலை நடுக்கம். மறுத்துப் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டில் நண்டு சுண்டு என்று ஏகப்பட்ட உருப்படி. “ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் உங்க தாத்தா ஒரு கிராமத்தையே உருவாக்கி விட்டார்” என்று என் மனைவியை அவளது பள்ளiக்கூடத் தோழிகள் கிண்டல் செய்வார்களாம்.
தாத்தாவிடம் யாராவது உங்களை நான் 4 மணிக்கு பார்க்க வருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். மனுஷர் வச்ச பார்வை வாங்காது கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு ஐந்து நிமிடம் தாண்டினாலும் போச்சு, அவ்வளவுதான்.. பார்க்க வருபவரை வாங்கு வாங்குன்னு வாங்கி விடுவார். “சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றதில்லையா? என்னை என்ன வேலை மெனக்கெட்டவன்னா நெனச்சீங்க? ச்சே.. அனாவசியமா எந்நேரத்தை வீணாக்கிட்டிங்களே?” என்று விளாசித் தள்ளி விடுவார். (இதில் வேடிக்கை என்னவென்றால் தாத்தாவும் வீட்டில் பொழுது போகாமல் சும்மா உட்கார்ந்து கிடக்கின்ற கேஸ்தான்) தாத்தா விட்டில் எப்பவுமே ‘பின்-ட்ராப் சைலன்ஸ்’தான். யாரும் உரக்க பேச மாட்டார்கள்.
அவருடைய மறைவுக்கு பல வருடங்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றிருந்தேன். மனம் போன போக்கில் கூத்தும் கும்மாளமுமாக ஜாலியாக இருந்தார்கள். இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற கண்டிஷனெல்லாம் இல்லை.
காதலி ஒருத்தி காதலனுக்காக காத்திருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். காதலன் தாமதமாக அந்த இடத்துக்குச் செல்கின்றான். வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் அவளுடைய முகம் கோபத்தால் சிவந்து விடுகிறது. சிணுங்கியும், கடிந்தும், பிகு செய்தும் அவள் ஊடல் புரிகின்றாள். காதலனும் அவன் பங்குக்கு இறங்கி வந்து குழைவாய்ப் பேசி சமாதானம் செய்கிறான். அந்த ஊடலின் இன்பம் இருக்கிறதே. அடடடடா..
வள்ளுவர் பிரான் இதற்காக ஒரு அதிகாரத்தையே தாரை வார்த்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த இன்பம் யாவும் லேட்டாக போவதினால்தான் கிடைக்கிறது. புரிகிறதா?
ஒருமுறை என் மைத்துனர் ஒரு விருந்துக்கு நேரத்தோடு சென்றிருக்கிறார். அங்கிருந்த கிண்டல் ஆசாமி ஒருவர் ‘சாப்பாடு என்றால் அடித்து மோதிக் கொண்டு முதலில் வந்து விடுகிறீரே” என்று நக்கல் செய்ய, பாவம் மனிதர் அன்றிலிருந்து நம்முடைய பாணியில் லேட்டாக செல்வதையே பழக்கமாக்கிக் கொண்டார்.
இதையெல்லாம் படித்த பிறகு நீங்களும் லேட்டாக போக ஆரம்பித்தால், என்னை விட சந்தோஷம் அடைகின்ற ஆசாமி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.
ஆங்கிலத்தில் B.P. என்று ஏதோ சொல்கிறார்களே. அது பெரும்பாலும் இந்த PUNCTUALITY பார்ப்பவர்களுக்குத்தான் வருகிறது. ‘கரெக்ட் டைமுக்கு கிளம்ப வேண்டும்’. ‘கரெக்ட் டைமுக்கு போய்ச் சேர வேண்டும்’ என்று பதஷ்டப்பட்டு பைக்கில் சென்று கையை காலை உடைத்துக் கொண்ட என் உறவுக்காரர்கள் சிலரை உதாரணம் காட்டலாம். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும். உயிர் முக்கியமல்லவா?
அதற்கு பதில் “லேட் லத்தீப்” என்ற பெயரே தேவலாம். March 14 எனது முதல் பதிவு.
நான் எழுதும் முதல் இணையப்பதிவு இது தான். முதல் முயற்சி. ஆங்கிலத்தில் First Impression is the Best Impression என்று சொல்வார்கள். என் மனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது ஆவல். நான் பார்த்த, பேசிய, என்னை பாதித்த எண்ணங்களை எங்கே இடுகிறேன். முதலில் நான் படித்த என்னை மிகவும் கவர்ந்த இணைய பதிவுகளை அவர்களது அனுமதி இல்லாமல், ஆனால் அவர்களது இணையப்பெயர் சுட்டியை குறிப்பிட்டு இடுகிறேன். அவர்களே இதை படிக்க நேரிட்டாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சியே ! |
|||||
|
|