இனியவன்'s profile┼█┼.۩۞۩.எண்ணச் சிதறல்கள்...BlogLists Tools Help

┼█┼.۩۞۩.எண்ணச் சிதறல்கள்.۩۞۩.┼█┼

The Pursuit of Happyness

இனியவன்

Occupation
Location
March 21

தாஜ்மகால்

எழுதியவர்: திரு அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

அன்று சித்ரா பெளர்ணமி. நின்றிருந்தவர்கள் நிலா ரசிகர்கள். நிலா ரசிகர்களில் நானும் ஒருவன். நிலாப் பெண் உலா வரும் நேர்முகக் காட்சியை கலாரசனையோடு கண்டு களிக்க வளாகத்தில் வந்தவர்கள்.

வந்தவர்கள் அனைவரும் காதலர்கள். காதலிக்கத் தெரிந்தவர்கள் அல்லது காதலில் திளைத்தவர்கள். சொல்லுங்கள்; யார்தான் காதலிக்கவில்லை? நேரமில்லாதவனும் காதலிப்பதுதான் விந்தையிலும் விந்தை!!

குழந்தைகள்; இளவட்டங்கள்; முதியோர்கள்; எல்லோரும் காதலர்கள்தானே? இதயம் என்ற ஒன்று இருந்தால் காதல் வரத்தானே செய்யும்?

ஒப்பிலா அந்த ஒப்பனை மாடத்தில் ஒய்யாரமாய் நிலா வந்து தன்னை அழகு திருத்திக் கொள்ளும் அற்புதக் காட்சியை அனுபவிக்கத்தான் இந்த அட்டகாச அணிவகுப்பு.

எனக்கு நிலா உலா கண்டதும் அளவிலா சந்தோஷம்; நிலையிலா உற்சாகம். மனதிலே மத்தாப்பு. பார்த்திராத பரவச பூத்திரி.

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகை உளவு பார்க்க சுற்றிலும் ஒற்றர்கள் கூட்டம். ஆம் ! எண்ணிலா விண்மீன்கள். மண்டபமெங்கும் கண்சிமிட்டிகளின் கண்கொள்ளா பிரதிபலிப்பு.

‘அழகின் சிரிப்பை’க் கண்டு களிக்க அக்கூட்டத்தில் பாவேந்தன் இல்லை. கொள்ளை கொள்ளும் வெள்ளைப் பளிங்கில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அப்பியிருந்தன கண்கள். கண்டவர்கள் கண்ணப்பர்களாக மாறியிருந்தனர்.

வைத்த விழிகள்; தைத்த விழிகளாக, வச்சப் பார்வைகள்; மிச்சப் பார்வைகளின்றி தீர்ந்து போயிருந்தன. கவிக்கொம்பன் கம்பனிருந்தால் கவிதை புனைந்திருப்பான் ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று.

ஆனைப் பசிக்கு சோளப் பொறியாய் விழுங்க விழுங்க விழிகளுக்குத் தாகம். அகோரப் பசியைத் தீர்க்கும் அட்சய பாத்திரமாய் மாறியிருந்தது தாஜ்மகால். பசிப்பிணி போக்கும் பளிங்குப் பழரசத்தை பருகின பரவசக் கண்கள்.

நிலவும் பெண். தாஜ்மகாலும் பெண். பால்நிலா பதுசாய் வைத்தது பூனைப்பாதம். அவனியெங்கும் பவனிவந்த நிலாப் பெண்ணுக்கு உலா வந்த களைப்பு கலைந்தது. மேக முக்காடிட்ட மோகனத்தைக் கண்டதும் ஆகாய நிலாவுக்கு ஆனந்தத் தாண்டவம்.

நிறம் மாறும் ரசவாதம் நிமிடத்தில் நிகழ்ந்தேறியது. பளிங்குக்கூடம் ஆனது பரிசோதனைக் கூடம். மனிதன் நிறம் மாறினால் பச்சோந்தி என்று துச்சமாய் வெறுத்த மனது இந்த பச்சோந்தித்தனத்தை இரசித்து இலயித்தது.

தாஜ்மகாலின் பளிங்குக் கிண்ணம் பொன் வண்ணம் மின்னும் கன்னமாய் சுண்டிப் போனது. நாணந்தான் வேறென்ன? “பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று கண்ணதாசன் பாடியது எண்ணத்தை கன்னமிட்டது.

மும்தாஜ் ஓர் அழகியாம். முள்ளை முள்தான் எடுக்கும்; வைரத்தை வைரம்தான் அறுக்கும். ஆஹா.. அழகுக்கு சமர்ப்பணம் இந்த பேரழகு !

உயிராயிருந்த அகலிகை கல்லானது புராணம் ! உயிரில்லாத கற்கள் உயிரோட்டமானது வரலாறு ! அது சாபம். இது வரம்! பெருந் திறம். தனித் தரம். புகழ் நிரந்தரம்.

கற்கள் பேசுகிறதென்றால் கடினம்தான் நம்புவது. எல்லா மொழியும் பேசியது; எல்லோருடனும் பேசியது. எல்லா நேரமும் பேசியது. இசைக்கு மொழியேது? கலைக்கு மொழியேது?

பல்லவனின் கைவண்ணத்தில் பேசியது கருங்கற்கள். ஷாஜகான் பேசவைத்தது சலவைக் கற்கள். கனக விசயனின் தலையில் ஏற்றிய கற்கள் அவனை தலை குனிய வைத்த கற்கள். இக்கற்கள் ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர வைத்த கற்கள். உலக அதிசயங்களில் ஒன்று. முதல் ஒன்று. இந்தியத் தாய்க்கு சிந்து வழி வந்த அந்த மன்னன் தந்து போன சுந்தர மகுடம்.

தூக்கும் கனத்தில் இருந்தால் இதையும் கோஹினூராய் தூக்கி இருப்பானோ அந்த பறங்கித் தலையன்?

சீனாக்காரன் சிலையாகிப் போக; பிரஞ்சுக்காரன் பிரமித்து நிற்க; அரபுக்காரன் அண்ணாந்து வியக்க; அமெரிக்கன் அதிசயித்து நோக்க; மொழிகள் முக்காடிட்டு மெளனராகம் இசைத்தன.

குடைந்தெடுத்து பதிக்கப்பட்ட நவமணிக் கற்கள் பிரெய்லி மொழியும் பேசியது. தொட்டனைத்தூறும் மணற்கேணியாய் பார்வையற்றவர்களுக்கும் பழம்பெரும் வரலாற்றை பாடம் புகட்டியது. விரல்களுக்கும் வியாக்யானம் தரும் விந்தையல்லவா அது?

ரத்தினக் கற்களால் வித்தைகள் புரிந்த அந்த சித்திரக் கைகளை முத்தமிட வேண்டும். யார் மனதிலோ அன்றுதித்த அந்த உத்தம எண்ணம் இத்தரையில் முத்திரையாய் இன்றளவும் நின்றுலாவும் காதற் சின்னம்.

இயற்கை மட்டுந்தான் அழகா? செயற்கையும் அழகுதான் என்று சொல்லாமல் சொல்கிறதே? இது மனிதப் படைப்பு. படைப்பிலே ஓர் அதிசயம். அதிசயங்களிலே ஒரு கிரீடம். கிரீடங்களிலே முதற்இடம். முதற் இடம்தந்த முன்னோனை வாழ்த்தியது நெஞ்சம்.

மூலப்போலிகை (Cloning) முயன்றும் முடியாத முகலாயச் சின்னம். நகலில்லா நளினம். களங்கமிலா காலப் பெட்டகம். கவிஞனுக்கு கற்பனையூற்று. காலங்காலமாய் களிப்பூட்டும் கலைப் பொக்கிஷம்.

அனார்கலிக்காக எழுப்பிய கற்கள் காதலுக்குச் சமாதி. மும்தாஜுக்காக எழுப்பிய கற்கள் காதலுக்கு மரியாதை. உயிரற்றுப் போன சடலத்திற்கு உயிரோட்டம் நிறைந்த ஒரு நினைவு மண்டபம்.

தாஜ்மகால் ஒரு காதற் காவியம். கவினோவியம். இலக்கணப் பிழை ஏதுமிலா இலக்கியப் பேழை. எதுகைக்கேற்ற மோனை, மோனைக்கேற்ற எதுகை.

நாற்புற வாயிலும் நாற்சீர் விருத்தமாம் நள வெண்பா. மைய அறை - எண்சீர் விருத்தம். இரட்டைக் கிளவியாய் கல்லறை. அதில் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாய் தொக்கி நிற்கும் ஷாஜகானின் சமாதி. பிற்பாடு நேர்ந்த பொருத்தமிலாச் சேர்க்கை.

தாஜ்மகால் ஒரு வடிவக் கணித அகராதி. அட்சரம் பிசகாத சமச்சீர் கோணங்களின் ஜாலங்கள். பரிவட்டம் ஜொலிக்கும் ரசமட்டம்.

ஆயிரம் பிகாஸோக்கள், ஆயிரம் ரவிவர்மாக்கள், ஆயிரம் லியோனார்டோ டா வின்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கலைப் படைப்பு. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பார்வையாளர்களை கவரும் பிரமாண்ட ஓவியக் கண்காட்சி.

கல்லறைப் பெட்டியல்ல அது. விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடுகள் நிறைந்த அழகு தேவதையின் ஆபரணப் பெட்டி.

கங்கையை தன் சிரத்தில் சூடிகொண்ட சிவனைப்போல, யமுனையும் தன் நதிதீரத்தில் தாஜ்மஹலை முடிமகுடமாய் சூடிக் கொண்டது.

பதினான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த மும்தாஜின் அழகு அவள் வாழ்நாளில் சற்றேனும் குறைந்திருக்கக் கூடும். நாளோரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் தாஜ்மகாலின் அழகு கூடிக் கொண்டே போவது ஓர் ஆச்சர்யம்.

மும்தாஜின் மூச்சு நின்றது அவளது முப்பத்தொன்பதாவது வயதில். இளமனைவியின் மறைவுக்கு மாமன்னன் வைத்த மலரஞ்சலி இந்த மணிமண்டபம். உலகத்திலேயே காதலுக்காக கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு இதுவாகத்தானிருக்கும்.

காதற் சின்னமாய் உலகம் ஏற்றுக்கொண்ட குறியீடுகள் இரண்டு. ஒன்று : இதயம், இன்னொன்று : தாஜ்மகால். இரண்டுமே மகத்தானது. விலையிலாதது. இதில் கனமானது தாஜ்மகால்தான். பரிசுத்தமான காதலுக்கு பரிசுத்தமான வெள்ளை நிறப் பரிசு.

காதலர் தினம் பிப்ரவரி பதினான்காமே? அது தாஜ்மகாலின் உதயதினமாக இருந்தாலென்ன?

திருச்சிராப்பள்ளி நினைவுகள்

எழுதியவர் : திரு அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

ஓடிக் களைச்சுப் போயி, “புஸ்”ஸுன்னு பெருமூச்சு விட்டு, நுரை தள்ளியபடி வந்து நின்னுச்சு நான் வந்த ரயிலு. திருச்சி ஜங்ஷனுலே காலடி எடுத்து வச்சதுமே விவரிக்க முடியாத ஒரு குஷி. திருச்சின்னு சொன்னாலே எனக்கோர் ஈர்ப்பு. ஒரு பந்தபாசம். என் தாய் பிறந்த ஊர். அதனாலோ என்னவோ. வெளிநாட்டுலே திருச்சிக்காரங்களை கண்டா ஓடிப் போயி கட்டிப் புடிச்சுக்கலாமேன்னு தோணும். ஏன்னு கேட்டா சொல்லத் தெரியாது.

“சரியான கந்தக பூமி. அதப்போயி புடிச்சிருக்குன்னு சொல்லுறியே?. கிறுக்குப் பயடா நீ ?” திருச்சியோட மகிமை தெரியாதவங்கதான் இப்படி நாக்கிலே நரம்பிலாம பேசுவாங்க.

இந்த முறை இந்தியா வந்ததுக்கு ஒரு இனிமையான அனுபவம். அலுமினி அஸோசியேஷனிலேந்து வந்த அழைப்பிதழை ஒருதரம் பாசத்தோட பார்த்துக்கிட்டேன். நாளைக்குத்தான் அந்த நிகழ்ச்சி. ஓல்ட் பாய்ஸ் எல்லாரும் ஒண்ணு கூடி அவங்களோட மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள போறாங்க.

இன்னிக்கி ஒரு நாள் ஊர் பூரா ரவுண்ட் அடிச்சு பழைய பசுமையான நினைவுகளை மறுபடியும் ரீசார்ஜ் செய்ய முடிவு பண்ணினேன்.

காவிரி தியேட்டர் மேம்பாலத்து மேலே போவும்போது ஆட்டோக்காரரு பெருமையா சொன்னாரு “அதோ பாத்தீங்களா சார்! அந்த மொட்டை மாடியிலேதான் காக்காவுக்கு சாதம் வக்கிற மாதிரி மலைக்கோட்டை படத்துக்கு ஷூட்டிங் எடுத்தாங்க. காக்கா லேசுலே வர மாட்டேன்னுடுச்சு. (அதுக்கு எவ்ளோ வேலையோ?) இந்த ரோடு பூரா ப்ளாக் பண்ணிட்டாங்க”. சொல்லும்போதே அவரு முகத்துலே ஒரு பரவசம். படம் ரிலீசான அன்னிக்கி ஸ்கிரீன்லே பூவை வாரி இறைச்சிருப்பாருன்னு தோணுது.

திருச்சிகாரங்களுக்கு பிரதான பொழுது போக்குன்னு சொன்னா, அது தியேட்டருலே போயி படம் பாக்குறதுதாங்க. இதே பாணியை மத்த ஊருக்காரங்களும் கடைப்பிடிச்சாங்கன்னா திருட்டு வி.சி.டி. அறவே ஒழிஞ்சுடும்.

சென்னைவாசிகளாவது போரடிச்சா பீச்சுக்குப் போயி சுண்டல் வாங்கிச் சாப்பிடுவாங்க. பாவம் இவுங்க எந்த சமுத்திரத்துக்கு போவாங்க? சொல்லுங்க.

அவுங்க ‘தலை’யோட படம் ரிலிஸாகுற அன்னிக்கி கட்-அவுட்டுக்கு போடுற மாலையை கிளிட்டன் பேண்டு வாத்தியத்தோட ஊர்வலமா ஊரையே ஒரு ரவுண்டு வந்து பெருசா அலம்பல் பண்ணிடுவாங்க. அவ்ளோ பெரிய மாலையை எல்லாத்துக்கும் காட்டலேன்னா ஊர்க்காரங்க கோவிச்சிக்கிடலாம் இல்லியா? குஷ்புவுக்கே கோவில் கட்டுனவங்கன்னு சொன்னா சும்மாவா?

சினிமாவுலே மெட்ராஸை காட்டணும்னா எல்.ஐ.ஸி.யை க்ளோசப்புலே காட்டுவாங்க. திருச்சின்னு சொன்னா மலைக்கோட்டையை Zoom போடுவாங்க. ரசிகர்களும் சூசகமா “ஓஹோ! இது திருச்சியிலே நடக்குற கதை”- ன்னு பக்குவமா புரிஞ்சிக்கிடுவாங்க. (கோவையை காட்டனும்னாதான் பாவம் டைரக்டரு திண்டாடிப் போயிடுவாரு)

ஆட்டோவிலே உக்காந்தபடி திருச்சியோட மாற்றத்தை கவனிச்சிக்கிட்டே வந்தேன். சீனப் பெருஞ்சுவர் மாதிரி வருஷக்கணக்கா கட்டுன சில மேம்பாலங்களோட வேலை முடிஞ்சிருக்கு. (அப்பாடா! இப்பவாவது முடிச்சாங்களே)

ஒரு காலத்துலே “ஜோஸப் காபி”-ங்குற தகர போர்டை முதுகிலே மாட்டிக்கிட்டு அந்த வெள்ளி நிற டவுன் பஸ் ஜங்ஷனுக்கும் மெயின்கார்ட் கேட்டுக்கும் இடையே ஓடிக்கிட்டு இருக்கும். இப்பவும் அதே வெள்ளி நிறம்தான். ஆனா முதுகுலே டின்னு வேற பேருல கட்டியிருந்தாங்க. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் சர்வீசு. வேற ஊருலே இதுமாதிரி பார்க்கவே முடியாது.

புதுசு புதுசா துணிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்டுங்க கண்ட மேனிக்கு முளைச்சிருந்துச்சு.

தேவர் ஹால் – இங்கேதான் உருது முஷாயிரா (கவியரங்கம்) முதல் சிலோன் லைலாவோட ரிக்கார்ட் டான்ஸ்வரை எல்லாமே நடக்கும். அது இப்ப ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா மாறியிருந்துச்சு.

ஒரு வெளிநாட்டுக்காரருக்கிட்டே “உங்க ஊரு டிராபிக், இந்த ஊரு டிராபிக். - இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”ன்னு கேட்டாங்களாம்.

“எங்க ஊருலே வண்டி பெட்ரோல்லே ஓடுது. உங்க ஊருலே வண்டி ஹாரன்லே ஓடுது”ன்னு பதில் சொன்னாராம். அது வாஸ்தவம்தான். ஆட்டோக்காரரு ‘பாம் பாம்’ன்னு ஹாரன் அடிச்ச மேனிக்கு ஓட்டிக்கிட்டே போனாரு.

தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ்கிட்டே இறக்கி விட்டுட்டு 40 ரூவா வாங்கிக்கிட்டாரு. எனக்கு ரொம்பா நாளா ஒரு ஆசை. மத்த ஊருங்க மாதிரி இந்த ஊருலேயும் மீட்டரை பாத்து காசு கொடுக்கணும்னு. அது இந்த ஜென்மத்துலே நிறைவேறும்னு தோணலே.

போரடிச்சா பேசாம மெயின் கார்டு கேட் பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா போதும். ஜாலியா டைம் பாஸ் ஆயிடும். உள்ளே பூந்ததுமே “சார் சவுதி ரியாலு இருக்கா?, டாலரு இருக்கான்னு?” கேட்டு பர்மா பஜாருகாரங்க இம்சை அரசனா மாறிடுவாங்க.

மெயின் கார்டு கேட்லே (மருத்துவர் ஐயாவின் கவனத்துக்கு : எதுக்கெதுக்கோ தமிழ்ப் பெயரு வைக்கிறாங்களே, இதுக்கு வைக்க மாட்டாங்களா?) அந்த பிளாட்பாரத்துலேதான் பார்வையில்லாத ஒருத்தரு புல்லாங்குழலை வச்சுக்கிட்டு “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”ன்னு வாசிச்சிக்கிட்டு இருப்பாரு. டிசம்பரு மாசம் சென்னை மியூஸிக் அகாடமியிலே 500 ரூவா டிக்கட் வாங்கி புளூட் ரமணி வாசிக்கிறதை இங்கே ஓசியிலே கேட்டுட்டு போயிடலாம்.

“ஏன்யா ஞான சூன்யம்! அந்த ஆளு வாசிக்கிறதும் இந்த ஆளு வாசிக்கிறதும் ஒண்ணாய்யா?” இதப் படிச்சிட்டு நம்ம பிரண்டு வி.என்.எஸ். இப்படித்தான் திட்டப்போறாரு.

“அந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. இந்த ப்ளுட்டுலேயும் காத்துதான் வருது. கண்ணு தெரியாத ஒருத்தரு இவ்ளோ தத்ரூபமா வாசிக்கிறாருன்னா அத பாராட்ட வேணாமா? அட போங்க சார்”-ன்னு சொல்லி அவரை ஈஸியா சமாளிச்சுடுவேன்.

சிந்தாமணியிலே சுடச்சுட வெஜிடபிள் சமுசாவை சாப்பிட்டுட்டு, கரும்பு ஜூஸையும் குடிச்சிட்டு, வெளியே வந்ததுமே பொடிப்பசங்க அந்துருண்டை பாக்கட்டையும், கைக்குட்டையையும் வச்சிக்கிட்டு “வாங்கிங்குங்க சார்” ன்னு பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தானுங்க. பாரதிராஜா படத்துலே வர்ற மாதிரி கைக்குட்டையை கொடுத்து காதல் பண்ணலாம்னு பாத்தா அந்த வயசும் நமக்கு தாண்டிடுச்சு.

கொஞ்சம் இந்தாண்ட வந்ததுமே பழைய ஞாபகம் வந்துடுச்சு. தெப்பக்குளம் ஓரமா ஒரு ஐயர் கத்திரிக்கா பஜ்ஜி சுடுவாரு. அத வாங்குறதுக்கு கஸ்டமருங்க போட்டி போட்டுக்கிட்டு நிப்பாங்க. இப்ப அந்த இடத்துல வரிசையா பழ வண்டி நின்னுக்கிட்டு இருந்துச்சு.

“ஓஹோ ! அந்த ஐயாரா? இப்ப அவரு ஆண்டாள் தெருவுலே கடை போட்டிருக்கிறாரு. நேரா போயி விசாரிங்க.”

ஒவ்வொரு ஆளா விசாரிச்சிக்கிட்டு போயி கடைசியா கண்டுபிடிச்சுட்டேன். வாவ்! அதே ருசி!. டேஸ்ட் கொஞ்சங் கூட மாறவேயில்லே.

மறுபடியும் மலைக்கோட்டை ரோடுலே நடந்து வந்தப்ப அக்கம் பக்கத்து ஊருலேந்து ஜனங்க கூட்டம் கூட்டமா, ஏதோ பிக்னிக் வந்த மாதிரி சாரதாஸ் வாசல்லே நின்னுக்கிட்டு இருந்தாங்க. எவர்சில்வரு தூக்குலே புளியோதரை அல்லது எலுமிச்சப்பழ சாதம்னு நெனக்கிறேன். விசேஷத்துக்கு துணிமணி எடுக்க வந்திருக்காங்க. எல்லாம் சரி. அதுக்காக இப்படியா ஊரையே திரட்டிக்கிட்டு வர்றது? இந்த மாதிரி ஷாப்பிங் போற கலாச்சாரத்தை இங்கீலீஸ்காரன் பார்த்தா வாழ்க்கையையே வெறுத்துடுவானுங்க.

சிங்காரத்தோப்புன்னு ஒரு இடம். மாந்தோப்பு, புளியந்தோப்பு, சவுக்குத்தோப்பு மாதிரி பச்சைப் பசேல்னு ஒரு புல்வெளி, அடர்த்தியான மரங்கள், சலசலன்னு ஒரு ஓடை, குயில் கூவுற சத்தம், குளு குளுன்னு காத்து - இப்படி நீங்க ஏடா கூடமா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. (கீரை வடைன்னு சொன்னா கீரை இருக்குது. ஆமை வடைன்னு சொன்னா அதுல ஆமையா இருக்கு? அது மாதிரி தான் இதுவும்)

‘சூப்பர்’ங்குற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ணுறது என்னவோ திருச்சிகாரங்கதான். “சூப்பர் பிகர்” “சூப்பர் படம்” “சூப்பர் அயிட்டம்” இப்படி எல்லாத்துக்கும் சூப்பர் போடுவாங்க. அங்கே உள்ள ஒரு பஜாருக்கு பேரு சூப்பர் பஜாரு. அப்படி என்ன சூப்பர் சாதனம் அங்கே கிடைக்குதுன்னு கேக்குறீங்களா? வேற என்ன? ஜட்டி, பனியன், நைட்டி, இதுங்கதான். அதை தவிர மின்விசிறி, விளக்கு இதுங்க கிடைக்கும். அம்புடுதேன்.

ஒரு காலத்துலே காந்தி மார்க்கட் பக்கம் வெல்லச் சர்க்கரையை மலை மாதிரி குவிச்சு வச்சு தொழிலாளிங்க அதுலே மண்வெட்டியாலே கொத்தி அதுலேயே மூக்கையும் சிந்துவாங்க. அப்ப விட்டதுதான். அதுக்கப்புறம் வெல்லக்கட்டியை நான் டேஸ்ட் பார்க்கவேயில்லீங்க.

சவுக் பகுதியிலே பழைய புஸ்தகக் கடைங்க நெறயா இருக்கும். வாடகைக்கு எடுத்து படிக்கலாம். சொற்பக் காசுதான். கண்ணதாசனோட மனவாசம். வனவாசம் போன்ற சுயபுராணம், மு.வ.வோட கரித்துண்டு நாவல்., கல்கியோட சிவகாமியின் செல்வன் இந்த கதையெல்லாம் இப்படி படிச்சு தெரிஞ்சிக்கிட்டதுதான்.

நவாப் பள்ளிக்கு எதிரே சாயங்கால நேரத்துலே ஜாதி மத வித்தியாசம் பாக்காம பொம்பளைங்க சின்னக் குழந்தைகளை இடுப்பிலே வச்சிக்கிட்டு நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க வேத வரிகளை ஓதி ஊதுவாங்க. மத நல்லிணக்கத்துக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இது.

லேடீஸ் சமாச்சாரம் விக்கிற கடைங்க கூட அப்படியேதான் இருக்கு. ஒரே ஒரு வித்தியாசம்தானுங்க. அன்னிக்கி கருப்பு நெறத்துலே நீளமான சவுரி முடி வித்துக்கிட்டு இருத்துச்சு. இப்ப சுருள் சுருளா, கலர் கலரா சவுரிமுடி. (இதுலேந்து என்ன புரியுதுன்னா அந்த காலத்துலேந்து இந்த காலம் வரை நெறய லேடீஸ்கிட்ட ஒரு-G, நாலு-T இல்லேன்னு புரியுது)

டவுன்ஹாலுக்கு பக்கத்துலே இருக்குற மரத்துலே குருவிங்க கும்பலா உக்காந்து அரட்டையடிக்கும். இந்தாண்ட பூட்டுச்சாவி ரிப்பேரு பண்ணுறவரு உக்காந்து எதையோ நோண்டிக்கிட்டிருப்பாரு. அந்தாண்ட ஒருத்தரு திருப்பாச்சி அறுவாளை தீட்டிக்கிட்டு இருப்பாரு. அவரு இளநீ விக்கிறவரு.

முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம் எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இப்பவும் இருக்குது. இன்னுமொரு 30 வருஷம் கழிச்சு வந்து பாத்தாலும் அப்படியேதான் இருக்கப் போவுதுங்குறது என்னோட கணிப்பு.

2

ஆகஸ்ட் 15

டோல்கேட்டை ஆட்டோ நெருங்குனதுமே மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம். ஒரு இளமைத் துள்ளல்.

‘ஜாலி ஜமால்’ என்று மாணவர்கள் பெருமை பட்டுக் கொள்ளும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி - ஒரு பரவசமிக்க சரணாலயம். ஜாலியா வாழ்க்கையே அனுபவிச்சுக்கிட்டே கல்வி ஞானத்தையும் வளர்த்துக்கலாம்.

மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்துச்சு. ஹோட்டல் ராதாஸ்லே ஒரு கப் காபி ஆர்டர் பண்ணிட்டு பழைய ஞாபகங்களை ஒவ்வொண்ணா அசை போட்டேன்.

ஆங்கில புரொபஸர் உஸ்மானி எப்பவும் கோட் சூட் போட்டுத்தான் காலேஜுக்கு வருவாரு. “நான் ஏன் தெனக்கும் கோட் போட்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லுங்க பார்ப்போம்” அப்பிடின்னு கிளாஸ்லே ஒரு புதிரு போடுவாரு.

“கெளரவத்துக்காக”, “புரொபஸருன்னு தெரியறதுக்காக”, “For Good Looking”, இப்படி பசங்க ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லுவானுங்க.

“நோ ! நோ ! யூ ஆர் ராங்”ன்னு சொல்லிட்டு கோட்டை நீக்கி காட்டுவாரு. சட்டையிலே சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். “ இதோ பாத்தீங்களா ஓட்டை ! இதை மறைக்கத்தான் நான் இந்த கோட் போட்டிருக்கேன்னு குட்டை போட்டு உடைப்பாரு. ஒளிவு மறைவு இல்லாத அவரோட வெகுளித்தனமான பேச்சு எனக்கு ரொம்பவும் புடிக்கும்.

தியேட்டருக்கே இதுவரை போகாம இருந்த யூசுப்சாரை, டியூஷன் பசங்க நாங்க வற்புறுத்தி ராக்ஸி தியேட்டருக்கு “புதிய வார்ப்புகள்” படம் பார்க்க கூட்டிக்கிட்டு போனப்போ “அடேங்கப்பா என்னப்பா இது? தியேட்டருலே எல்லாமே இம்மாம் பெருசா தெரியுது?”ன்னு சோடா புட்டி கண்ணாடியை தூக்கி விட்டு கமென்ட் அடிச்சது இன்னும் பசுமையா நினைவிலே இருக்கு.

நாங்க படிக்கும்போது ‘காலேஜ் டே’ அன்னிக்கி சீஃப் கெஸ்டா ஒரு கலெக்டரு வந்தாரு. அவரு ஒரு காலத்துலே ஜமால்லே படிச்சவராம். ஹாஸ்டல்லே போடுற குஸ்காவை பத்தி புகழோ புகழ்ன்னு புகழ்ந்து தள்ளுனாரு. ‘குஸ்கா’ன்னு சொன்ன தாளிச்ச நெய்ச்சோறு – கொஞ்சம் மஞ்சளா இருக்கும் அவ்ளோதான். அப்படி அதுலே என்னதான் சுகத்தை கண்டாரோ தெரியலே. இதப்போயி இந்த மனுஷன் அரைமணி நேரமா பாராட்டி பேசுறாரேன்னு நெனச்சேன்.

அந்த காலத்துலே நாங்க அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா? பொன்மலைப் பட்டியிலே ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்து சைக்கிள்ளே லைட் இல்லாம போலீஸ்கிட்டே மாட்டிக்கிட்டது ஞாபகம் வந்துச்சு.

காலேஜ் பசங்க இன்சூரன்ஸ் பாலிஸி வச்சில்லேன்னாலும் அவங்களுக்குள்ளே சில பாலிஸி வச்சிருந்தாங்க. போட்டோ புடிக்கனும்னா மாடர்ன் ஸ்டுடியோ. துணி தைக்கிறதுக்கு டாம் டைலர். தம்-சாய் குடிக்கனும்னா கிராண்ட் ஹோட்டல், நான்வெஜ்ஜுக்கு ராஜா ஹோட்டல், இப்படி அவுங்களுக்குள்ளே தனித்தனி பாலிஸி.

சங்கிலியாண்டபுரம் போயி மணி கடையிலேதான் முடியை வெட்டிக்கிட்டாதான் அவனுங்களுக்கு ஆத்ம திருப்தி. நானும் ஒரு தடவை எதிர்காத்துலே கஷ்டப்பட்டு சைக்கிளை மிதிச்சிக்கிட்டு போனேன்.

லோக்கல் ஆசாமி ஒருத்தரு வாசல்லே பந்தல் போட்ட ஒரு வீட்டை காண்பிச்சு என்னோட பொது அறிவை மேம்படுத்தினாரு.

“அதோ பாத்தீங்களா! அதுதான் எம்.ஆர். ராதாவோட வீடு”.

கொஞ்ச தூரத்துலேதான் மணியோட சலூன். ‘ஸ்டெப் கட்’ ஆச்சே, படியிலே உக்காந்துக்கிட்டு வெட்டுவாரோன்னு பாத்தா அவரும் எல்லாரையும் மாதிரி சேர்லே உக்கார வச்சுத்தான் வெட்டுனாரு.

பெல்பாட்டம் அணியாதவனை செவ்வாய் கிரகத்து ஜந்துவை பாக்குற மாதிரி பசங்க கேவலமா பார்ப்பானுங்க. யாரு ரொம்ப பெரிய பெல்பாட்டம் வைக்கிறானோ அவன் முற்போக்குவாதின்னு அர்த்தம். அல்தாஃப் 40 இஞ்ச் வைத்து தைப்பான். ஒரு சின்னப் பையனை பேண்டுக்குள்ளார வச்சு தாராளமா கிட்நாப் பண்ணலாம்.

டின்னர் பெரும்பாலும் “Hotel-de-Broadway” யிலேதான். டோல்கேட்லே இருக்குற கையேந்தி பவனுக்கு நாங்க வச்ச செல்லப் பேரு அது. புரோட்டாவை சப்ளையரு அவரோட அழுக்கு கையாலே பிய்ச்சுப் போடுவாரு. பிய்ச்சுப் போடலேன்னா அதுக்கொரு சண்டை. “

“நீ அந்த ஆளுக்கு பிய்ச்சுப் போட்டியே? எனக்கு ஏன் போட மாட்டேங்குறே?”

அட வாழைப்பழ சோம்பேறிங்களா? சொந்த கையாலே புரோட்டவை பிய்க்கிறதுக்கு கூட அலுப்பு படுறானுங்களேன்னு நொந்துப் போயிடுவேன்.

பாலக்கரை பிரபாத் டாக்கீஸுக்கு முன்னாடிதான் அந்த ஜிகர்தண்டா தள்ளு வண்டி நிக்கும். ஸ்பெஷல்னு சொன்னா போதும். அந்த பாய் நைஸா குனிஞ்சு எவர்சில்வர் பாத்திரத்துலேந்து பாலாடை பாதர்த்தத்தை எடுத்து சூப்பரா கலந்து கொடுப்பாரு. உண்மையிலேயே ஈரல்குலையை குளிர்விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்.

தீபாவளி வந்துடுச்சுன்னா என் பிரண்டு குணசேகரன் வாங்கோழி பிரியாணி சாப்பிடுறதுக்கு பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டலுக்கு ஓடிப் போயிடுவான். மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு வந்து “சூப்பரா இருந்துச்சு மச்சி” ன்னு முகத்துக்கு நேரே சூடா ஒரு கொடுமையான ஏப்பத்தை விடுவான். “ஏண்டா.. நீ சாப்பிட்டுட்டு வந்தது வாங்கோழியா? இல்லே நெருப்புக் கோழியா?” ன்னு தமாஸ் பண்ணுவேன்.

வடமாநிலத்து மாணவன் ஒருத்தன் எங்கக் கூட படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் பேரு அஞ்சும். வேகமாக நடந்து போய்க்கிட்டிருந்த அஞ்சுமை நிறுத்தி “ Are you fasting?”-ன்னு ஆரிப் கேட்டிருக்கான். அது ரம்ஜான் மாசமும் கிடையாது. “No, no, I am not fasting” அப்பிடின்னு சொல்லிட்டு விருட்டுனு அவன் போயிட்டான்.

“எங்கேடா வேகமா போயிக்கிட்டு இருக்கிறேன்னு கேக்குறதுக்கு என்கிட்ட I am not fasting-ன்னு பொய் சொல்றான் பாத்தியா?. இவனெல்லாம் ஒரு பிரண்டா?”

பின்னால நடந்து வந்த என்கிட்ட ஆரிப் குறை கூறினான்.

“போகட்டும் விட்டுத் தொலைடா. அவன் இங்கிலீஷ்லே கொஞ்சம் வீக். அதுக்காக நீ ஏன் பெருசா பீல் பண்ணுரே” ன்னு ஆறுதல் சொன்னதும்தான் ஆரிப் சமாதானமடைஞ்சான்.

ஆரிப்புடைய ஆங்கிலப் புலமையை பத்தி அவசியமா இங்கே குறிப்பிடணும். ஜங்ஷன் பக்கத்துலே “Hotel Ashby” ன்னு ஒரு ஹோட்டல். அதை இந்த பிரகஸ்பதி “ஹோட்டல் அஸ்ஹாபி”ன்னு இங்கிலீஷ்லே எழுத்துக் கூட்டி படிப்பாரு. ‘அஸ்ஹாபி’ன்னா நபித்தோழர்கள்ன்னு அர்த்தம். நமக்குத் தெரிஞ்சு எந்த நபித்தோழரும் இந்த ஊருலே ஹோட்டல் ஆரம்பிக்கலியேன்னு மண்டையை போட்டு உடைச்சுக்குவேன்.

ஒருதடவை ஹிந்து பத்திரிக்கையை கையிலே வச்சிக்கிட்டு “சொமெடிமஸ்” ன்னு சத்தம் போட்டு வாசிச்சான் ஆரிப். இப்படி ஒரு வார்த்தையை வாழ்க்கையிலே நாம கேள்விப்பட்டதே இல்லையேன்னு எட்டிப் பார்த்தா அது “Sometimes” –ங்குற வார்த்தை. “சாப்பாடுப் போடப்படும்”ன்னு எழுதியிருந்ததை ஒருத்தன் “சாப்பா-டுப்போ-டப்ப-டும்” ன்னு வாசிச்சானாம். அது மாதிரி ஆயிடுச்சு.

குளத்தூரார் பிரியாணி, கற்கண்டு பால், சிங்காரத்தோப்புலே மாடி மேல இருக்கிற குஜராத்தி மெஸ், ராயல் ஓட்டல் பாயா - இத எதை மறக்குறது சொல்லுங்க?

“எக்ஸ்க்யூஸ் மீ சார்”

ஒரு கப் காபி குடிச்சிட்டு இவ்ளோ நேரம் இந்த மனுஷன் டேபிளை ஆக்கிரமிச்சுக்கிட்டு உக்காந்து இருக்குறானேன்னு சப்ளையரு நெனச்சானோ என்னவோ. பில்லை வச்சிட்டு டக்குன்னு டம்ளராலே சிக்னல் காண்பிச்சான். புரிஞ்சிக்கிட்டு இடத்தை காலி செய்தேன்.

மீட்டிங் ஆரம்பிக்கிற நேரம். சாஹுல் ஹமீது சார் அடையாளம் கண்டுபிடிச்சுட்டு ‘வாங்க வாங்க’ன்னு வரவேற்றாரு. நிறைய புரபொஸர்ஸ் ரிடையர்ட் ஆகி போயிட்டாங்க. நம்மள கூப்பிட்டு மரியாதை நிமித்தமா மேடையிலே உக்கார வச்சு “இவரு வெளி நாட்டுலே இருக்காரு. புஸ்தகங்கள்ளாம் எழுதியிருக்காருன்னு” அறிமுகப் படுத்துனாங்க. விலாவிலே இறக்கை முளைச்ச மாதிரி ஒரு பீலிங்.

நம்மள விட சீனியர் ஓல்ட் பாய்ஸ் – பல்கலைக்கழக துணை வேந்தரு, ஓய்வு பெற்ற நீதிபதி, அரசியல்வாதி, பிசினஸ்மேன் எல்லாரும் மேடையிலே உக்காந்து இருந்தாங்க.

தங்களோட பழைய அனுபங்களை பகிர்ந்துக்கிட்டாங்க. மனசை நெகிழ வச்சது. அவுங்க முகத்துலே ஒரு களை. சின்னப் பசங்களா மாறியிருந்தாங்க.

நான் பேசும்போது புரொபஸர் நஞ்சுண்ட மூர்த்தியிலேந்து, யூசுப் சார், DJ வரை எல்லாத்தையும் நினைவுபடுத்தி பேசினேன்.

அலுமினி அஸோசியஷன் முடிஞ்சவுடனே சாஹுல் ஹமீது சார் சொன்னாரு.

“உங்களுக்கு ஒரு குட் நியூஸ். நீங்க குஸ்கா சாப்பிட்டுத்தான் போவணும்”.

“மவனே நீ சரியா மாட்டிக்கிட்டே!” மனசாட்சி இடையில் புகுந்து பகை மூட்டி விட்டது. அதை பொருட்படுத்தாமல் குஸ்காவை சாப்பிட ஆரம்பிச்சேன்.

ருசியென்றல் ருசி. அப்படியொரு ருசி. இதப் போயி நல்லாயில்லேன்னு சொன்னோமே? அன்னிக்கி ஓல்ட் பாய்ஸ்லே ஒருத்தரா வந்த அந்த கலெக்டர் பாராட்டி பேசுனது உண்மைதான்னு தோணுச்சு. அந்தந்த சூழ்நிலையிலேதான் அந்தந்த இனிமை நமக்கு உண்மையிலேயே புலப்படுது.

பக்கத்து மேசையிலே 50+ & 60+ ஓல்ட் பாய்ஸ் குஸ்கா, கோழி, மட்டன், சுவீட் எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ள முக்கால்வாசி பேருக்கு ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் எல்லாமே இருக்கும்னு நெனக்கிறேன்.

இந்த நேரத்துலே அதப் பத்தி எதையும் அவுங்க கவலைப் படுற மாதிரி தெரியலே. நடையிலே ஒரு இளமை மிடுக்கு, முகத்துலே ஆனந்தம், பேச்சிலே நையாண்டி, குறும்பு – இதையெல்லாம் அவங்கக்கிட்ட பார்க்க முடிஞ்சுது.

3

இரண்டு நாட்கள் விசிட்டை முடிச்சிட்டு திருச்சியை விட்டு பிரிந்தேன். பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷனுலேந்து சென்னையை நோக்கி புறப்பட்டுச்சு. கோட்டை ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதுமே மலைக்கோட்டை தெரியுதான்னு ஜன்னல்லேந்து எட்டிப் பார்த்தேன். வச்ச பார்வை தீராம அதையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

கூட்ட நெரிசல்லே குஞ்சம் வச்ச துருக்கி தொப்பியை அணிஞ்சிக்கிட்டு போனா எப்படி ஒருத்தரு தனியா தெரிவாரோ அந்த மாதிரி தூரத்துலேந்தும் மலைக்கோட்டை தெளிவா காட்சி தந்துச்சு.

 

மீசை

எழுதியவர் : திரு அப்துல் கையூம்

vapuchi@hotmail.com  

(மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)

சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.

மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் கொண்டு திரிவதென்றால் எரிச்சலாக இருக்காதா பின்னே?

“ஆம்பளைன்னா அவனுக்கு மீசை இருக்கோணும்” இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக அறிவுறுத்தும் ஆசாமிகளைக் கண்டால் எனக்கு பற்றிக் கொண்டு வரும். இப்படி ஒரு பார்முலாவை ஒரு பேச்சுக்கு உண்டாக்கி வைத்துச் சென்ற அந்தக் கால பெருசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ மீசை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தைபோல் தோன்றவில்லை. வடமொழியாக இருக்கலாமோ?

மீசைக்கு நம்மவர்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து விட்டார்களோ என்று சில சமயம் எண்ணத் தோன்றும். ஆங்கிலேயர்களோ, மற்ற நாட்டினரோ மீசை இருந்தால்தான் ஆண்பிள்ளை என்று சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லையே?

முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் எதிரொலி என்று அர்த்தமாம். என்ன அநியாயம் இது? சீனர்களுடைய மீசை பூமியை பார்த்த வண்ணம் புடலங்காய் போல தொளதொளவென்று தொங்கிய வண்ணம் காட்சி தரும். அவர்கள் இனத்தில் வீரர்கள் இல்லவே இல்லையா? பூனைக்குகூட மீசை இருக்கிறதே? அது என்ன பெரிய வீரனா? மீசையே இல்லாத ஜான்ஸிராணியை வீரத்தின் உதாரணமாக நாம் சொல்வதில்லையா?

பிளாஷ் பேக் - எனக்கு என் வீட்டில் பெண் பார்க்க அலைந்தார்கள். இந்தி நடிகன் போல் ஸ்டைலாக காட்சி தரவேண்டும் என்ற காரணத்துக்காக நான் மீசையை மழித்துக் கொண்டிருந்தேன். “ஏம்பா நீ மீசை வச்சா என்னா?” என் தகப்பனாருடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. “இது என்ன இது பொறிச்ச வாடா மாதிரி” என் பாட்டியின் தோழி அய்ஷானுடைய குசும்பு. இந்த நக்கல் ஓவர்தானே?

“பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் உன் போட்டோவை அனுப்பி வை” என்று என் தகப்பனார் கடிதம் எழுதியபோது மீசை இல்லாத போட்டோவைத்தான் அனுப்பி வைத்தேன். பார்த்து முகம் சுளித்திருப்பாரோ என்னவோ?

கல்யாணத்திற்குப் பின் ஒருநாள் என் மனைவி சொன்னாள். “உங்க போட்டோவை முதன் முதலில் பார்த்தபோது 16-வயதினிலே படத்தில் வர்ற டாக்டர் மாதிரியே ஸ்டைலா இருந்துச்சா, எனக்கு மிகவும் புடிச்சுப் போச்சு.” அட்றா சக்கை. எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. காலம் முழுக்க மீசையே இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழிக்க சால்ஜாப்பும் லைசன்சும் கிடைத்த ஏகபோக ஆனந்தம் எனக்கு.

மீசை வைப்பவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மீசை இல்லாதவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மீசையை ஒதுக்குகிறேன், ட்ரிம் செய்கிறேன் என்று கூறி பாத்ரூமில் பாதி நேரத்தை செலவழித்து விடுவார்கள். பொன்னான நேரத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் இந்த மீசை இல்லாதவர்கள் என்று நான் மார்தட்டிச் சொல்ல முடியும்.

போன்சாய் என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் மீசையை பற்றி இப்படி எழுதியிருந்தேன்.

இன்றோடு போகட்டும்

இந்த நச்சரிப்பு மீசை

உதட்டோரம் எனக்கு

வீண் சுமை

வெறுமனே ஒரு

முகப்புத் தோரணம்

முணுமுணுக்கும்

கம்பளiப் பூச்சி

உண்மையைச் சொன்னால்

மோக யுத்தத்தில்

முத்தத்தின் எதிரி

இதைப் படித்துப் பார்த்த என் சித்தப்பா டாக்டர் அப்துல் ரசாக்கிற்கு என்ன ஆத்திரமோ தெரியவில்லை.

மீசை

மோக யுத்தத்தில்

முத்தத்தின் எதிரி

என்று எழுதியிருந்தாய். மீசை செய்யும் குறும்பை நீ அறியமாட்டாய் என்று விமர்சனம் செய்து எழுதி இருந்தார்.

அவர் கறுகறுவென்று தடிமனான மீசை வைத்திருப்பார். அவருடைய அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார். நாம் ஏன் அநாவசியமாக விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

சினிமாவில் காமெடி செய்வதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் அல்லது யுக்தி இந்த மீசை என்பது நான் வைக்கும் வாதம். சந்திரபாபு, ஏ.கருணாநிதி, தங்கவேலு, நாகேஷ் இவர்களுடைய மீசையைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.

பழைய கறுப்பு வெள்ளை படங்களiல் ஹாஸ்ய நடிகர் “துடிக்கிறது என் மீசை” என்று வீர வசனம் பேசுவார். ஒட்டு மீசை துள்ளி கீழே விழும். தியேட்டரில் சிரிப்பு அலைமோதும். சமீபத்தில் வெளிவந்த 23-ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவின் நடிப்பை விட அவருடைய கொடுவா மீசையின் நடிப்புக்கே பெரும் வரவேற்பு கிடைத்தது. (போதாதக்குறைக்கு கிச்சுகிச்சு மூட்ட மீசைக்கு மேலே இரண்டு பூக்கள் வேறு. கொடுமையடா சாமி)

மீசை என்ன பொல்லாத மீசை? அதே போன்சாய் தொகுப்பிலே இன்னொரு கவிதை இப்படி எழுதியிருந்தேன்.

மீசை முளைத்தோரெல்லாம்

பாரதி என்றால்

எனக்கும் ஆசை

கவிதை வடித்திட

இப்படிக்கு பாசமுடன்

கரப்பான் பூச்சி - என்று

ஒரு சமயம் சலூனில் அமர்ந்து படுஜாலியாக மீசையை மழித்துக் கொண்டிருந்தபோது வானொலியில் அந்த பழைய பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மணமகள் தேவை - நல்ல

மணமகள் தேவை

ஆணழகன் ஒருவனுக்கு

அரும்பு மீசைக் காரனுக்கு

தேவை தேவை தேவை

மணமகள் தேவை

எனக்கு எரிச்சலாக வந்தது. அரும்பு மீசை இருந்தால் அவன் ஆணழகனா? இந்த பாடலை எழுதிய கவிஞனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கத்தோன்றியது. பென்சிலால் வரைந்ததுபோல் சிலர் மெல்லிய மீசை வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரும்பு மீசையாம். இது மோவாயில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதற்குப் பெயர் மீசையா? பேனாவும் பேப்பரும் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா? இப்படியெல்லாம் மனதுக்குள் கொதித்துப் போவேன்.

ஹிட்லர் மீசை, மா.பொ.சி மீசை, வீரப்பன் மீசை. என்று சிலருடைய மீசை மிகவும் பிரபலமாகி விட்டது. மா.பொ.சி. இவ்வளவு பெரிய மீசையை வைத்துக் கொண்டு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் மனுஷர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

மீசை முருகேஷ் என்ற அருமையான இசைக் கலைஞர். எல்லா விதமான பக்க வாத்தியங்களும் இவருக்கு அத்துப்படி. வாயினாலேயே எல்லா விதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் கொடுப்பார். அவருடைய அபரிதமான இசைஞானத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டுதல்களைவிட அவருடைய மீசைக்கு கிடைத்த பாராட்டுதல்களே அதிகம். மீசை இன்று இருக்கலாம் நாளை காணாமல் போகலாம். இதுக்குப்போய் இத்தனை ஆரவாரமா? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

“மீசைக் கவிஞன் பாரதி” என்று கவிஞர்கள் பாராட்டும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். அவனுக்கு மீசை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? அவன் எழுதிவைத்திருப்பதை பாராட்டுவதை விட்டுவிட்டு அனாவசியமாக மீசையை பெரிதுப் படுத்தி புகழ்கிறார்களே என்று ஆத்திரம் வரும்.

நானும் சில உண்மைகளை வெளiப்படையாகச் சொல்லத்தான் வேண்டும். என்னதான் மீசை மீது ஒரு வெறுப்பிருந்தாலும் அவ்வப்போது மீசை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்ததென்னவோ உண்மைதான். அந்த ஆசை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

வெளிநாட்டில் வசிக்கும் நான் ஒருமுறை தாயகம் புறப்பட ஆயத்தமாகும் தறுவாயில் மீசையோடு ஊருக்குப் போனால் சற்று வித்தியாசமாக இருக்குமே என்று மீசை வளர்த்தேன். இதற்காக மெனக்கெட்டு எந்தவிதமான முயற்சியோ கஷ்டப்படவோ இல்லை. ஒண்ணுமே செய்யாமல் சிவனேன்னு இருந்தேன். அதுவாக வளர்ந்து விட்டது. ஓரளவு வளர்ந்த பிறகு மீசையை அழகு படுத்தலாமே என்று முனைந்து ஒதுக்க ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் ஒரு பக்கம் பெரிதாகவும் மற்றொரு பக்கம் சிறிதாகவும் போய்விட்டது. மேலும் என் திறமையை காண்பிக்கப்போக, குரங்கு அப்பத்தை பிய்த்த கதையாக அது ஹிட்லர் மீசையாட்டம் அலங்கோலமாக போய்விட்டது. அன்று மீசை மீது எனக்கு வந்த கோபம் சொல்லிமாளாது. மீசை என்று யாராவது பேச்செடுத்தால் அவர்களை கடித்துக் குதறவேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் தாயாருடைய போன் வந்தது. “நீ ஊர்வரும்போது அவசியம் மீசைக்காரத் தைலம் கொண்டு வா மறந்து விடாதே” என்று உரக்கச் சொன்னார். “அதெல்லாம் முடியாது நான் கோடாலித் தைலம் வாங்கி வருகிறேன்” என்று அதைவிட உரக்கமாக கத்தினேன்.. “நீ எப்பவும் இப்படித்தான் நான் ஒண்ணு சொன்னால் நீ ஒண்ணு செய்வே” என்று சலித்துக் கொண்டு போனை வைத்தார். என்னுடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

“மீசை நரைத்தாலும் இவனுக்கு ஆசை நரைக்கவில்லை பாருங்கள்” என்று நடுத்தரவயதினரைப் பார்த்து யாராவது கிண்டலடித்தால் நான் கடுப்பாகி போவேன். மீசை நரைத்தால் என்ன? ஆசை இருக்கக் கூடாதா? விடலைப் பருவத்தின்போது வருவது வெறும் காதல் மயக்கம். ஆத்மார்த்த காதல் பிறப்பதோ நடுத்தர வயதில்தான் என்பது என்னுடைய பயங்கரமான கண்டுபிடிப்பு. ஜொள்ளர்கள் இந்த வயதில்தான் அதிகம்.

“At Forty Men become naughty; Women become fatty”

என்று ஆங்கிலேயன் சும்மாவா சொல்லி வைத்துப் போனான்? எத்தனை அனுபவம் பொதிந்த வாக்கியம் இது?

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவி கரிசனமாக அருகில் வந்து “எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நம்மை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளiடம் போய் நான் என் மீசையைப் பத்திதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால் “இவனுக்கு கழன்றுவிட்டதோ?” என்பதுபோல் ஒரு மாதிரியாக பார்ப்பாள். எதற்கு இந்த தொந்தரவென்று இரண்டு கைகளாலும் எழுதுவதை மறைத்துக் கொண்டேன். கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

எந்த வித முணுமுணுப்பும் இல்லாது இத்தனை வருஷம் மீசை இல்லாமல் ஜாலியாக ஓட்டி விட்டேன். திடீரென்று இந்த விபரீத ஆசை மீண்டும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சென்ற மாதம் மறுபடியும் மீசை வளர்க்க ஆரம்பித்தேன். பாதி வெள்ளை முடி, பாதி கறுப்பு முடி. கண்ணாடியில் பார்த்தபோது வயதானவன்போல் ஒரு தோற்றம். ஒரு விருந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு இடும் மையை லேசாக ஆட்காட்டி விரலால் தடவி மீசை மீது பூசிக் கொண்டால் ஒண்ணும் தெரியாது என்று என் மனைவி சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்ல அதுபோலவே செய்தேன். இழந்த இளமை ஒருவழியாக மீண்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. விருந்துக்கு போன பிறகு கைகழுவச் சென்ற நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் ஈரமான என் கைகளை முகத்தில் பூசிக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கப் போக, அப்பொழுதுதான் புரிந்தது. என் மேக்கப் கலைந்து முகமெல்லாம் கரியை பூசிக் கொண்டதுபோல் ஆகிவிட்டது. வெட்கித்துப்போய், பூனைபோல் மெதுவாக அங்கிருந்து நழுவி வந்தேன்.

அதற்குப் பிறகு நண்பன் ஒருவனின் உபதேசத்தின்படி ‘டை’ செய்தால் என்ன என்று தோன்றியது. அது கறுப்பு மருதாணி என்று சொன்னார்கள். முதன் முறை என்பதால் எப்படி பூசுவது என்று தெரியவில்லை. பசைபோல கரைத்து என் மனைவியிடம் கொடுத்து பூசச் சொன்னேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஒரு பட்டையான பிரஷ்ஷை எடுத்து சுவற்றுக்கு சுண்ணாம்பு பூசுவதைப் போல் விளாசித் தள்ளி விட்டாள். அரைமணி நேரம் நகரக் கூடாது என்று கண்டிஷன் வேறு. முடி கன்னங்கரேல் என்று ஆகிவிட்டது.

அடுத்த நாள்தான் அந்தக் கொடுமை. அந்த மருதாணியில் என்ன கெமிக்கல் சேர்ந்திருந்ததோ தெரியவில்லை. என் முகம் முழுதும் புஸ்ஸென்று வீங்கி அரிப்பும் எரிச்சலும் தொடங்கி விட்டது. மீசையை அப்படியே பிய்த்து எறிந்து விடலாம் என்று தோன்றியது. மோவாயெல்லாம் புண்ணாகி விட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டேன். அலர்ஜி ஆகிவிட்டதாம்.

புண் ஆறியதும் முதல் வேலையாக மீசையை மழித்து வீசி எறிந்தப் பின்தான் எனக்கு திருப்தி. இப்பொழுதெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விபரீத ஆசையும் வருவதில்லை. இளமையாகவே இருப்பதுபோல் ஓர் உணர்வு, உற்சாகம். முகத்தை லேசாக வருடிக் கொண்டேன். வழுவழுவென்று அட்டகாசமாக இருந்தது.

Punctuality

எழுதியவர் : திரு அப்துல் கையூம் 

vapuchi@hotmail.com

உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான்.

“எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற கலையில் இன்னும் சரியாக தேர்ச்சி பெறாததே இதற்கு காரணம். சரியென்று மனதில் பட்டதை உளறிக் கொட்டி நண்பர்களiடத்தில் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு,

பள்ளிப் பருவத்தில் காலந்தவறாமையின் அவசியத்தை எனக்கு எடுத்துரைக்காத ஆசிரியர்களே இல்லை எனலாம். காலந்தவறாமையை ஒருவன் தவறாது கடைப்பிடித்தால் அவன் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை எட்டி விட முடியம். இது அவர்கள் ஆற்றிய அறிவுரைகள்.

பின்னர்தான் எனக்குப் புரிந்தது காலந்தவறாமையை கடைப்பிடித்தால் மட்டும்போதாது, அறிவு இருந்தால் மட்டும் போதாது, எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் அவசியம் வேண்டும் என்று.

“டோஸ்ட் மாஸ்டர்ஸ்” என்ற இயக்கத்தில் என்னைச் சேர சொன்னார்கள். ஆரம்பத்தில் இது ஏதோ நட்சத்திர ஓட்டல் சமையற்காரர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் சங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அப்புறமாகத்தான் தெரிந்தது அது பேச்சுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு இயக்கம் என்று.

PUNCTUALITY இது அவர்களுடைய தாரக மந்திரம். அதற்குத் தலைவராக இருக்கும் என் நண்பர் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” கூட்டத்திற்கு சரியான நேரத்தில் சென்று சரியான நேரத்தில் கூட்டத்தை தொடங்கி விடுவார்.

காலந்தவறாமையின் அவசியத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் உணர்ச்சி ததும்ப எடுத்தியம்புவார். அதை விடுத்து மற்ற நேரங்களில் இத்தனை மணிக்கு வருகிறேன் என்று வாக்களித்து விட்டு மனுஷன் சரியான நேரத்துக்கு வந்ததாக சரித்திரமே இல்லை.

இவர்கள் ஒரு பேச்சுக்காகவும் பகட்டுக்காகவும் வெளீயுலகத்திற்கு காட்டுவதற்காக மட்டுமே சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றும்.

அவசியம் நேர்ந்தாலொழிய மற்ற நேரங்களில் காலந்தவறாமையை கடைப்படிப்பதற்காக அவ்வளவுதூரம் மண்டையை போட்டு நாம் அதிகம் உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நான் முடிவெடுத்து ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன.

“ஏன்யா.. ஒருத்தன் வேலை தேடி ஒரு அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு போறான்னு வச்சுக்க, அவன் கரெக்டான நேரத்துக்கு போவலேன்னா செலக்ட்டே ஆக முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் போது நீ வாசகர்களுக்கு அட்வைஸ் பண்ற லட்சணமாய்யா இது?” என்று நீங்கள் முனகுவது என் காதில் விழத்தான் செய்கிறது.

“இதோ.. பாருங்க மிஸ்டர்.. நீங்க எல்லோரும் இனிமே ஆபிஸுக்கு லேட்டாத்தான் போவணும். போயி நல்லா வாங்கிக் கட்டிக்கணும்” அப்படின்னு நான் சொல்ல வரலே. என்னோட அனுபவத்திலே நானும் எவ்வளவோ காலந்தவறாமையை கடைப்பிடிச்சு பார்த்துட்டேன். ஊஹும்.. பிரயோஜனமே இல்லை. உங்களுக்கு அது வொர்க் அவுட் ஆனுச்சுன்னா தாரளாமா கடைப்பிடியுங்க. நானா வேணாமுன்னு சொல்றேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திலே நாம் ஆஜராகுறது என்பது பிரச்சினையே இல்லை. சில சமயம் அதை பாராட்டுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் வயிற்றெரிச்சல்.

நான் வசிக்கிற பஹ்ரைன் நாட்டிலே இந்தியச் சங்கங்கள் கலாச்சார விழாக்கள் நடத்தும். நேரத்தோடு சென்று பார்வையாளர்களுக்காக நாற்காலிகளை எடுத்து வரிசையாக போட்டதுதான் மிச்சம்.

நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 7 மணி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் பேனர் மாட்டிக் கொண்டிருப்பார்கள். மைக்செட்காரர் பொறுமையாக ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருப்பார்.

பங்க்ச்சுவாலிட்டி என்பது வேறொன்றும் இல்லை. முன்கூட்டியே ஒரு இடத்திற்குச் சென்று யார் யார் எவ்வளவு லேட்டாக வருகிறார்கள் என்று வேவு பார்க்க உதவும் ஒரு யுக்தி என்பது எனது கொலம்பஸ் கண்டுபிடிப்பு.

ஒரு கூட்டத்திற்கு ஒருத்தர் லேட்டாக வந்தால் அவர் வி.ஐ.பி. என்று அர்த்தம். ஆளுக்காளு எழுந்து நின்று கும்பிடு போடுவார்கள். இன்னும் படுலேட்டாக வந்தால் அவர் வி.வி.ஐ.பி. என்று அடையாளம் கண்டுக் கொள்ளலாம். அவருக்கு வரவேற்பு இன்னும் படுஉற்சாகமாக இருக்கும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

"The Early bird gets the worm, but the Early worm gets eaten"

முன்கூட்டியே செல்லும் நற்பண்பு கொண்ட அந்த புழுவுக்கு கிடைத்த சன்மானம் அது அந்த பறவைக்கு இரையாகப் போனதுதான். பார்த்தீர்களா? நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்களே?

நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு படத்திலே "நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்" என்று சொல்லும் போது தியேட்டரே துர்ள் கிளப்பும். அதற்கு என்ன அர்த்தம்? அவர் லேட்டாக வருவதை ரசிகர்கள் அங்கீகரிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்?

நான் பள்ளியில் படிக்கும் போது அபுபக்கர் எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வருவான். வாத்தியார் அவனை சரியான “லேட் லத்தீப்”பாக இருக்கிறாயே என்று சொல்வார். இதற்கு முன் எந்த லத்தீப் இப்படி லேட்டாக வந்து உவமை காட்டக்கூடிய அளவுக்கு உயர்fந்த மனிதர் ஆனார் என்று தெரியவில்லை. அந்த லேட் லத்தீபை கண்டு மனதார பாராட்ட வேண்டும். “இன்று எல்லோரும் உதாரணம் காட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறீரே.. நீர் பலே கில்லாடி ஐயா” என்று.

என் பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நாகையில் சர் அஹ்மது மரைக்காயர் என்ற பிரமுகர். “சர்” என்ற கௌரவ பட்டம் ஆங்கிலேயன் தந்து விட்டுப் போனதாம். இந்த பிரமுகர் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் அவருக்கு வேண்டி ரயிலும் காத்திருக்குமாம். அவர் பொழுதோடு சென்று ரயிலேறி இருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக கருதி என் பாட்டி சொல்லியிருக்க மாட்டார்.

எந்த அரசியல்வாதியாவது சரியான நேரத்துக்கு பொதுக் கூட்டத்திற்கு வந்ததாக நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா? எவ்வளவுக்கெவ்வளவு ஜனங்களுடைய பொறுமையை சோதித்து தாமதமாக வருகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பெரிய பிரமுகர் என்று அர்த்தம்.

எத்தனையோ அரசியல்வாதிகள் சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதித்து வந்ததால்தான் அவர்கள் வெடிகுண்டிலிருந்தும், கண்ணி வெடியிலிருந்தும் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

நான் நெருங்கிய உறவினர்களுடைய வீட்டுக்கு விருந்துண்ண போனால் வழக்கப்படி தாமதமாக “லேட் லத்தீபாகவே” செல்வது வழக்கம். “என்ன இவ்வளவு லேட்டாக வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டால் கைவசம் ரெடியாக வைத்திருக்கும் இலத்தின் பழமொழியை எடுத்து விடுவேன். அது "Better Late than Never" என்பது.

லேட்டாக போவது பெரிய விஷயமே அல்ல. அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் திறமையே அடங்கி இருக்கிறது. சமாளிஃபிகேஷன் என்பது ஒரு தனிக்கலை. (ஆயகலைகள் 64-ல் இதனை நம் முன்னோர்கள் சேர்த்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை)

லேட்டாக அடிக்கடி போயி பழகிக் கொண்டால்தான் அந்த கலையை நாம் திறம்பட வளர்த்துக் கொள்ள முடியும். சமயோசித புத்தி என்பது இதில் வரப்பிரசாதம்.

பங்க்சுவாலிட்டியை கீப்-அப் செய்கிறேன் என்று கூறும் பேர்வழிகளுக்கு இந்த கலைத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாது.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுகிறான் பார்” என்று யாராவது நம்மை புகழ்ந்தால் ‘ஓரளவு இந்த கலையில் தேர்ச்சி பெற்று வருகின்றோம்’ என்று பொருள்.

மலேசியாவில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் மிகவும் தாமதமாக செல்கிறார், பார்வையாளர்களிடமிருந்து விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுடைய ரத்த அழுத்தம் எகிறிவிட்டிருந்தது. மின்னல் வேகத்தில் மேடையில் வந்த கண்ணதாசன் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.

“சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். ஆனால் எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்றார். அவ்வளவுதான் சோர்ந்து போயிருந்த கூட்டத்தினர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து விட்டனர்.

இதோ போன்று இன்னொரு முறை அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணிக்கு பேசுவதாக இருந்தது. சித்திரை மாதம் வேறு. புழுக்கம் தாங்க முடியவில்லை. இரவு பத்து மணியாகியும் அண்ணா வரவில்லை. கூட்டம் பொறுமையை இழந்து கூச்சலும் குழப்பமும் அதிகமாகி விட்டது. “பெரியோர்களே… தாய்மார்களே தயவுசெய்து அமைதி காக்கவும். இன்னும் சற்று நேரத்தில் தலைவர் அவர்கள் வந்து விடுவார்” என்று ஒரு கரைவேட்டிக்காரர் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பத்தரை மணிக்கு அண்ணா

மேடை ஏறினார்.

மாதமோ சித்திரை

நேரமோ பத்தரை

உங்களுக்கோ நித்திரை

என்று சமயோசிதமாய் அடுக்குமொழியில் பேச ஆரம்பித்து விட்டார். கூட்டத்தினருக்கு அசதியும் சோர்வும் பறந்து போயே விட்டது. தாமதமாக வரும் அளவுக்கு ஒருவர் உயர்ந்து விட்டால் அவர் எப்படிப்பட்ட நிலைமையையும் திறமையாக சமாளித்து விடுவார் என்று அர்த்தம்.

சரியான நேரத்தில் வந்து சரியான நேரத்தில் சில அரசு பேருந்துகள் கிளம்பி விடும். காலநேரத்தை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்கு warning கிடைத்து விடும். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாகவே இருக்கும். அந்த போக்குவரத்து நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும்.

அதே பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் போக்குவரத்து லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும். சரியான நேரத்துக்கு வந்து விடும். ஆனால் சரியான நேரத்துக்கு கிளம்பாது. டுர்.. டுர்.. என்று உறுமிக் கொண்டு கிளம்புவதைப்போல் பாவ்லா காட்டும். ஆனால் கிளம்பாது. ஒரு வழியாக பயணிகளுடைய வசைமொழிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு எல்லா காலி இருக்கைகளையும் நிரப்பியே பிறகே நடத்துனர் விசிலை ஊதுவார். அதே பஸ்ஸில் கடுப்பாகி உட்கார்ந்திருக்கும் நான் வண்டி புறப்பட்டவுடன் ‘ஹு...ம் பிழைக்கத் தெரிந்தவர்கள்’ என்று மனதார அவர்களை பாராட்டிக் கொள்வேன்.

என் மனைவியின் தாய் வழி தாத்தா மிகவும் கண்டிப்பான பேர்வழி. சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்துக்கு துர்ங்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். நேரம் தவறவே மாட்டார். கல்யாணமான புதிரில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். பகல் 12.00 மணிக்கு மதிய உணவை பரிமாறிவிட்டு “மாப்பிள்ளே .. நல்லா சாப்பிடுங்க” என்றார், காலைச் சாப்பாடே நமக்கு 11.00 மணிக்குத்தான். உள்ளே தள்ளிய இட்லியும் தோசையும் இன்னும் செரிமானமே ஆகவில்லை. இந்த லட்சணத்தில் தட்டை நிறைய சோற்றை குவித்து வைத்து “ஒரு வெட்டு வெட்டுங்க மாப்பிள்ளே..” என்று சொன்னால் எதை வெட்டுவது?

அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரவு 8.00 மணிக்கெல்லாம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு “படுத்து நல்லா துர்ங்குங்க மாப்பிள்ளே..” என்று வேறு 144 சட்டம் போடுவார்’ “கிழிஞ்சது கிருஷ்ணகிரி போ..” என்று மனதுக்குள் முனகிக் கொள்வேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து இரவு 1.00 மணிக்கு முன்னர் துர்ங்கியதாக ஞாபகமே இல்லை.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாத்தாவைக் கண்டால் எல்லோருக்கும் குலை நடுக்கம். மறுத்துப் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டில் நண்டு சுண்டு என்று ஏகப்பட்ட உருப்படி. “ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் உங்க தாத்தா ஒரு கிராமத்தையே உருவாக்கி விட்டார்” என்று என் மனைவியை அவளது பள்ளiக்கூடத் தோழிகள் கிண்டல் செய்வார்களாம்.

தாத்தாவிடம் யாராவது உங்களை நான் 4 மணிக்கு பார்க்க வருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். மனுஷர் வச்ச பார்வை வாங்காது கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு ஐந்து நிமிடம் தாண்டினாலும் போச்சு, அவ்வளவுதான்.. பார்க்க வருபவரை வாங்கு வாங்குன்னு வாங்கி விடுவார். “சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றதில்லையா? என்னை என்ன வேலை மெனக்கெட்டவன்னா நெனச்சீங்க? ச்சே.. அனாவசியமா எந்நேரத்தை வீணாக்கிட்டிங்களே?” என்று விளாசித் தள்ளி விடுவார். (இதில் வேடிக்கை என்னவென்றால் தாத்தாவும் வீட்டில் பொழுது போகாமல் சும்மா உட்கார்ந்து கிடக்கின்ற கேஸ்தான்) தாத்தா விட்டில் எப்பவுமே ‘பின்-ட்ராப் சைலன்ஸ்’தான். யாரும் உரக்க பேச மாட்டார்கள்.

அவருடைய மறைவுக்கு பல வருடங்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றிருந்தேன். மனம் போன போக்கில் கூத்தும் கும்மாளமுமாக ஜாலியாக இருந்தார்கள். இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற கண்டிஷனெல்லாம் இல்லை.

காதலி ஒருத்தி காதலனுக்காக காத்திருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். காதலன் தாமதமாக அந்த இடத்துக்குச் செல்கின்றான். வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் அவளுடைய முகம் கோபத்தால் சிவந்து விடுகிறது. சிணுங்கியும், கடிந்தும், பிகு செய்தும் அவள் ஊடல் புரிகின்றாள். காதலனும் அவன் பங்குக்கு இறங்கி வந்து குழைவாய்ப் பேசி சமாதானம் செய்கிறான். அந்த ஊடலின் இன்பம் இருக்கிறதே. அடடடடா..

வள்ளுவர் பிரான் இதற்காக ஒரு அதிகாரத்தையே தாரை வார்த்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த இன்பம் யாவும் லேட்டாக போவதினால்தான் கிடைக்கிறது. புரிகிறதா?

ஒருமுறை என் மைத்துனர் ஒரு விருந்துக்கு நேரத்தோடு சென்றிருக்கிறார். அங்கிருந்த கிண்டல் ஆசாமி ஒருவர் ‘சாப்பாடு என்றால் அடித்து மோதிக் கொண்டு முதலில் வந்து விடுகிறீரே” என்று நக்கல் செய்ய, பாவம் மனிதர் அன்றிலிருந்து நம்முடைய பாணியில் லேட்டாக செல்வதையே பழக்கமாக்கிக் கொண்டார்.

இதையெல்லாம் படித்த பிறகு நீங்களும் லேட்டாக போக ஆரம்பித்தால், என்னை விட சந்தோஷம் அடைகின்ற ஆசாமி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.

ஆங்கிலத்தில் B.P. என்று ஏதோ சொல்கிறார்களே. அது பெரும்பாலும் இந்த PUNCTUALITY பார்ப்பவர்களுக்குத்தான் வருகிறது. ‘கரெக்ட் டைமுக்கு கிளம்ப வேண்டும்’. ‘கரெக்ட் டைமுக்கு போய்ச் சேர வேண்டும்’ என்று பதஷ்டப்பட்டு பைக்கில் சென்று கையை காலை உடைத்துக் கொண்ட என் உறவுக்காரர்கள் சிலரை உதாரணம் காட்டலாம். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும். உயிர் முக்கியமல்லவா?

அதற்கு பதில் “லேட் லத்தீப்” என்ற பெயரே தேவலாம்.

March 14

எனது முதல் பதிவு.

 

நான் எழுதும் முதல் இணையப்பதிவு இது தான். முதல் முயற்சி.

ஆங்கிலத்தில் First Impression is the Best Impression என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் முதல் முயற்சி என்பது அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்பதும் " முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்பதிலும் நம்பிக்கை உடையவன்.

என் மனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது ஆவல். நான் பார்த்த, பேசிய, என்னை பாதித்த எண்ணங்களை எங்கே இடுகிறேன்.

முதலில் நான் படித்த என்னை மிகவும் கவர்ந்த இணைய பதிவுகளை அவர்களது அனுமதி இல்லாமல், ஆனால் அவர்களது இணையப்பெயர் சுட்டியை குறிப்பிட்டு  இடுகிறேன்.

அவர்களே இதை படிக்க நேரிட்டாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சியே !
நான் இவ்வாறு எழுதுவதை Plagiarism என்று எண்ண வேண்டாம். ஏனெனில் நான் அவர்கள் பெயரையும்  சுட்டியையும் குறிப்பிட்டு தான் எழுதுவேன்.